பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 07, 2017

ஓ மை காட்...

அடுக்குமாடி வீட்டில் ஒரு காருக்கு மடடும்தான் இலவச பார்க்கிங்.
அதற்கடுத்த கார்களுக்கு பார்க்கிங்கிற்கு நாளொன்றுக்கு ஐந்து ரிங்கிட் கொடுக்க வேண்டும். தினம் ஐந்து ரிங்கிட் கொடுத்தால் மாதம் நூற்று ஐம்பது வெள்ளி என்பது முதலாம் ஆண்டு கணக்குத்தான்.

ஆனால் இடத்திற்கு முன்பணமாக
இருநூறு ரிங்கிட் கொடுக்கச்சொல்வது என்ன கணக்காக இருக்கும் என
புரியவில்லை. கேட்டதற்கு கார் நிறுத்துவதற்காக டெப்பாசிட் பணம்
என்றார்கள். கார் நிறுத்த அவசியமில்லையென்றால் முன்பணத்தைகொடுத்துவிடுவார்கள். நமட்டு சிரிப்பு வேறு.

மற்ற இரண்டாம் மூன்றாம் கார்காரர்கள் போலவே அடுக்குமாடி குடியிருப்பைச்
சுற்றி இருக்கும் சாலையோரத்தில் காரை நிறுத்த ஆரம்பித்தேன். நல்ல வாகானமர நிழலில் எனக்காக காலி இடம் ஒன்று இருந்தது.

தினமும் காரை நிறுத்திவிட்டு பக்கத்தில் இருக்கும் மரத்திடம்,  காரை
பார்த்துக்கொள்ளச் சொல்லுவேன். அதுவும் கிளையசைக்கும். மீண்டும் காரைஎடுக்க வரும் போது காரை பார்த்துக்கொண்டதற்கு நன்றி என்பேன், மரம் இலையசைக்கும். ஒவ்வொரு நாளும் காரின் மேல் குறைந்த இலைகளே இருக்கும்.
காருக்கு மேலே இருக்கும் கிளை பரப்பு மட்டும் பச்சைப்பசேலென்று செழுமையாக இருக்கும்.

சில சமயங்களில் வேறு யாரும் அவ்விடத்தில் காரை நிறுத்திவிடுவது உண்டு.அப்போதெல்லாம் அவ்வழியில் நடந்து வரும் போது மரத்தையும் கிழே இருக்கும் வேறொரு காரையும் ஓரப்பார்வைப் பார்ப்பேன். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது சட்டென  கிளை முறிந்து அந்த காரின் மீது விழுந்தது. எனக்கு பகீரென்றது. மறுநாள் யாரும் அங்கு கார்களை வைப்பதில்லை.

ஏதோ நம்பிக்கை என்றில்லாமல் மரத்தின் மீதிருந்த அன்பினால் என் காரை வழக்கம் போல அங்கு நிறுத்திகொண்டு வருகிறேன்.
சொல்ல வந்த விடயம் அதுவல்ல.
இன்று காரை நிறுத்திவிட்ட சமயம் ஏதோ பதற்றம் தோன்றியது. சிறிது நேரம் மரத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்டுபிடித்துவிட்டேன்.

மரத்தின் அடிப்பகுதியில் சங்கிலி கறுப்பு சாமி படத்தை வைத்து அதனை சுற்றி கருப்பு துணியை போட்டு கூடவே அவர் குடிப்பார் என இவர்களில் யாரோ குடித்த காலி பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்கள்.

இன்னும் கொஞ்ச நாளில் பல விதமான சாமி படங்களை மரத்தைச்சுற்றி அடுக்குவார்கள்.

வாரம் ஒரு நாளென படையல் வைப்பார்கள்.

யாராவது சீனனிடம் சிலைக்கு ஸ்பான்ஸர் வாங்குவார்கள்.

ஒருவருக்கு சில நாட்களில் ஐயா நம்பர் அடிக்க வைப்பார், அதில் அவர்
தாவாரம் போடுவார்.

அமர்ந்து பேசுவதற்கும் பாட்டில்களை அடுக்குவதற்கு மேஜை நாற்காலியை போடுவார்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து அமர்ந்து உலக வரலாறு முதல்
உள்ளூர் கிசுகிசு வரை பேசிக்கொள்வார்கள்.

இப்படியே போனால் சரியில்லையென, குரூப்பில் ஒருவரை தலைவராக்குவார்கள்.

அவரும் பதவிக்கு வந்த அடுத்த நாளே அந்த வட்டார மக்களிடம் வசூலுக்கு வருவார்.

நாளுக்கு நாள் அவ்விடம் விசாலமாகும்.
மரமே மதுரை வீரனாகவோ சங்கிலி கருப்பராகவோ காளியாகவோ மாற்றம் கண்டிருக்கும்.

மாதத்தில் முதல் வாரம் அண்ணதானம் நடக்கும்.

வாகன நெரிசல் ஏற்படும்.

தூரத்தில் இருக்கும் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு நடந்தே வர
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள்.

கார்டூன் போல உடையணித்து கலர்கலர் மண்டைமயிரில் சில இளைஞர்கள் நடந்துச்செல்லும் அருள் சாமிக்கு பாடிகார்ட்டுகளாக நடந்துவருவார்கள்.

24 மணிநேர உணவகங்கள் போல இவ்விடம் அருள் வங்கிகளாக வருவோர் போவோர்களுக்கு
ஆசி வழங்கி ரிசிட் கொடுக்கும்.

இரவு பன்னிரெண்டுக்குக்கூட உடுக்கை அடித்து பஜனை பாடுவார்கள்.

கோவில் உறுப்பினர் வீட்டு விஷேசங்களுக்கு இங்கு பட்டாசு வெடிப்பார்கள்.

சீக்கிரமே நகராட்சி மன்றம் இதனை கண்டுகொள்ளும் அல்லது புகார் போயிருக்கும்.

அவர்களும் இடத்தின் மூலத்தை கண்டறிந்து ஒரு மாத நோட்டிஸ் கொடுப்பார்கள்.

இவர்கள் எதையும் கண்டுக்காமல் கோவிலில் அனுமார் சிலை வைக்க காசு கேட்பார்கள்.

மறுமாதமே இவர்கள் கட்டி முடித்த கோவிலை இடிக்க ஓங்கி இயந்திரமும் இரும்பு உளிகளும் வந்திருக்கும்.

பக்தி முத்திய நிலையில் பாதி இடித்த கோவிலை முக நூலில் போட்டு யாராவது.லைவ் வீடியோ செய்வார்கள்.

கூட இருந்தவர்கள் எல்லாம், தமிழர்களுக்கு இங்கு உரிமையில்லை என முகநூலில் பொங்கி வழிந்து சில நாட்களை ஓட்டுவார்கள்.

இடிபட்ட கோவில் இடுக்கில் இதுவரை நின்றிருந்த மரமும் சிக்கியிருக்கும்.

கோவில் இடிபட்டதாக இருக்கும் எண்ணிக்கையில் இன்னொன்றையும் கணக்கெடுத்துக் கொள்வார்கள்.

மரமிருந்ததில் அடையாளமாக பூமியில் ஏதோ ஓர் ஆழத்தில் அதன் வேர் பாதி செத்திருக்கும்.

அவ்விடம் தனியார்க்கானது என பலகையுடன் வேலி போடப்பட்டு அந்த நடைபாதி மூடப்படும்.

இப்படியே நடந்து முடிந்திருக்கும் சமயத்தில் என் காரை பார்க் செய்ய
வேறெங்காவது இடம் கிடைக்குமா என தேடிக்கொண்டிருப்பேன். எனக்கும்
மரத்திற்குமான உறவு மறக்கப்பட்டிருக்கும்.

-       தயாஜி

ஆகஸ்ட் 25, 2017

பொம்மியின் வருகை

பொம்மி

என் மேல் விழும்
தாக்குதல்களை
உன் வருகை மட்டுமே
சரி செய்யும்
பாழாய் போன வாழ்க்கையில்
உன் வருகை மட்டுமே
வசந்தம் சேர்க்கும்
நான காணாமல் போவதற்குள்
இனி வீணாக சாவதற்குள்
தாயாக வந்துவிடு
கொஞ்ச காலமேனும் வாழ விடு

என் சிதைவுகளை
சிறுகச்சிறுக சேகரித்து
சட்டகம் அமைத்து
ஒட்டி வைக்கிறேன்

நாளையொரு நாள்
நீ வந்து நிற்கும் பொழுதில்
ஜென்ம ஜென்மமாய்
காத்திருந்தவன் உன் தகப்பனென
புரிந்து புன்னகை செய்ய

புத்தனுக்கும் பித்தனுக்கும்
இடைபட்டவனை
இடரில் இருந்து காத்திட
உனக்கு மட்டுமே சாத்தியம்
என்னை சூழ்ந்திருக்கும்
சூழ்ச்சிகளை
உன் கண்கள் மட்டுமே
கண்டு விலக்கும்
நான் சுமந்து நிற்கும்
இழிசொற்களை
உன் கரங்கள் மட்டுமே
கழுவ முடியும்

தேவை நீ வா
தேவதையாக நீ வா

#தயாஜி
#பொம்மி

ஆகஸ்ட் 20, 2017

பொம்மியை கொல்லப்பார்க்கிறார்கள்

என்னை பிரசவிக்க
பூமி வரும் பொம்மிக்காக
என்னவெல்லாம் செய்யலாம் என
ஏடுகள் முழுக்க குறிப்புகள் கொண்டேன்

நான் கண்டிராத
நான் தொட்டிடாத
விளையாட்டு சாமான்களை
இப்போதே வாங்கி அடுக்கியுள்ளேன்

பொம்மிக்கென்று ஓர் அறை
ஊதா வண்ணமாய்
சுவர் முழுக்க பட்டாம்பூச்சிகளை ஒட்டிவைத்துள்ளேன்

ஒவ்வொரு பட்டாம்பூச்சியின் தலையிலும் தங்க நிற
ஜிகுனா தூள்களை சேர்த்துள்ளேன்

இரவானால் விளக்கெரியும்
வசதிகொண்ட நட்சத்திரங்களை
கைக்கு எட்டிய தூரம்வரை  தொங்கவிட்டுள்ளேன்

என் பொம்மி
இவ்வறைக்குள்ளே நுழைவதை
வரலாற்று குறிப்பாக்க
அறைவாசலில்
மெல்லிய வகையில்
மென்மையாக
மிகமிக மென்மையாக
பொம்மியின் பிஞ்சி கால்
வலிக்காமல் களிமண்ணை குவித்துள்ளேன்

கைராசி டாக்டருக்கு
இப்போதே பிரசவ பில்களை சேமிக்க
யானை உண்டி வாங்கி வைத்தேன்
எனக்கும்  யானை உண்டியல்தான் பிடித்திருந்ததாம் அம்மா ஒரு முறை சொல்லி சிரிக்கலானார்

அண்ணன் எப்போதுமில்லாத அக்கறையில்
தான் பெற்ற குழந்தைகளில்
சத்துணவுக்கான புத்தகத்தை பாதி கிறுக்கியும் மீதி கசக்கியும்
கொடுத்துவிட்டு போனான்

நண்பர்களின் கேலிக்கும் கிண்டல்களுக்கும்
வெட்கமும் சிரிப்பும் வந்ததே தவிர கோவமில்லை

அவளுக்குத்தான் உள்ளூர பயம்
ஏதோ ஒரு பொழுதில்
தோழி சொன்ன  கதை
பிரசவம் என்பது இன்னொரு
திடீர் சாவு

மகட்பேறு விடுமுறைக்கான அட்டவணையில்
எனக்கும்கூட விடுமுறை என சொன்னார்கள்
இப்போதே சில வேலைகளை முடிக்க புதிய நண்பர்களும் உதவினார்கள்

இன்று அவளுக்கு பிரசவ வலி
எனக்கு உடம்பெல்லாம் ஏதோ ஆனது
மண்டை மயிரெல்லாம் ஈரமாகிப்போனது
குத்திட்டு நிற்கும் உடலுரோமங்களை சரிசெய்ய தோன்றாமல்
பூமி வந்த பொம்மியை
எப்படி தாதியிடமிருந்து பெறலாம்
ஒத்திகையில் பயத்தை ஒத்திவைத்தேன்

பிரசவ அறையில் கைப்பிடியை
இறுக்கமாக மிக இறுக்கமாக
பிடித்துக்கொண்டேன்
ஏதேதோ வார்த்தைகளைத்
திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தேன்
பொம்மி வந்துவிட்டாள்
என் தேவதை
பூமிக்கு வந்துவிட்டாள்
என்னில் பாதி இப்போது முழுமையாகிவிட்டது

சட்டென்ற நிசப்தம்
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்
அவள் பேச்சுமூச்சற்று இருக்கிறாள்
இதயம் இருமடங்காய் துடித்தது

பொம்மி செத்தேதான் பிறந்ததாலாம்
அவள் மயக்கம் தெளிய நேரமாகுமாம்
கடைசியில் பொம்மியும்
என்னை ஏமாற்றப்பார்க்கிறது

என் பொம்மி சாகவில்லை
அதோ கட்டிலில் கிடக்கிறாள் பாருங்கள்
என் பொம்மி

நீங்கள் மரணித்ததாய் சொன்ன குழந்தையின் குரல் எனக்கு கேட்டது
அதோ பாருங்கள்
எத்தனை ரம்மியமாக தூங்கிக்கொண்டிருக்கிறாள்

என் பொம்மி
கணவனை கொன்று
தகப்பனை பிரசுவித்து கொடுத்திருக்கிறாள்
அதற்கு விலையாய் தன்னையும் கொன்றுவிட்டாள்

நிறைவாய் பொம்மி
எனக்கும் தாயாகி
சிரிக்கிறாள்

#தயாஜி
#பொம்மி

ஆகஸ்ட் 16, 2017

பொம்மி

*பொம்மி*

உனக்காக நானுமல்ல
எனக்காக நீயுமல்ல
நமக்காக இங்கு
யாவும் காக்கவே செய்கின்றன

பௌர்ணமி ஒரு நாள்
கண்சிமிட்டி உன்
வருகை தினத்தை
விசாரித்து குறிப்பெடுத்துக்
கொண்டது

சூரியன் மறுநாள்
என் மீது பனித்துளிகள் வீசி
நீ வந்ததும்
தகவல் சொல்லச்சொன்னது

உன் கால் விரல்களின் இடுக்கில்
பட்டுவிடவேண்டி விதைகள் பல
முளைவிட மறுப்பதாக
செடி கொடி வந்து என்னிடம்
புகாரிக்கின்றன

உன்னை சுமந்தப்பிறகே என்னை
நனைப்பேன் என
மழைக்கும் எனக்குமான
பேச்சு வார்த்தை
சுமுகமாக முடிந்ததில்
இன்றுவரை என்னை
நனைக்காமலேயே
வந்து போகிறது மழை

என் அத்தனை கோவத்தையும்
நீ பயப்படுவாய் என
கண்படா தூரத்தில் மறைத்துவிட்டேன்
இது தெரியாமல்
புழு பூச்சி மனிதனெல்லாம்
என்னை சீண்டிச் சிரிக்கின்றன

நீ வரவேண்டும் என
காமத்திற்கும் வடிகாலின்றியே
உறக்கம் கலைந்த கோண்டான்களுடன் ஒன்றாய் இரவினை கண்விழித்து கடக்கிறேன

எல்லோரும் கண்ணனின்
பாதங்களுக்காக காத்திருக்கிறார்கள்
கண்களில் படாத உனக்காக நான் காத்திருக்கிறேன்

வேண்டுமெனில் சொல்
என் உதிரத்துளிகளைச் சேமித்துத் தருகிறேன்
அதிலுன் பாதம் பட்டு
நான் வாழும் இடத்தில்
நடை பழகு
அப்போதாவது இடுகாடு
இனிய இல்லமாகட்டும்

#தயாஜி

ஏப்ரல் 21, 2017

அரு.சு.ஜீவானந்தனும் நானும்

எப்போதோ கேள்விப்பட்ட நாவல். ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம். புத்தகத்தின் முகப்பை விளம்பரமொன்றின் பார்த்த போதே மனதில் பதிந்தது.
யார் சொன்ன நாவல் என்ன உள்ளடக்கம் போன்றவை நிழலாக தெரிந்தாலும் புத்தகம் தேடிக்கண்டடைய முடியவில்லை.
சமீபத்தில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனை பணி நிமித்தமாக சந்திந்தேன். அவர் குறித்து கொஞ்சம் பகிர வேண்டும்.

இயல்பாகவே அவர் மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடவடிக்கையில் ஒரு தோரணை இருக்கும். மிடுக்காக தெரிவார்.
இருவருமே வானொலி (ஆர்.டி.எம்) பணியைச் சார்த்தவர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

அவர் எனக்கு அறிமுகமானதே சுவாரஷ்யமான ஒன்று.
எனது பதின்ம வயதில் கெடா சுங்கை பட்டாணியில் இருந்தேன். அப்பாவும் எழுத்தாளர் என்பதால் பல புத்தகங்களை அலமாரியில் அடுக்கி வைத்து சிலவற்றை அவ்வபோது கொடுத்து படிக்கச்சொல்வார். இப்போது எழுத்தாளராக நினைப்பவர் தான் எழுதியதையே படிக்க நேரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது வேறு கதை.

அப்படி அப்பா படிக்கச்சொல்லிக் கொடுத்த ஒரு புத்தகம் 'ஜீவானந்தன் கதைகள்'.
முகப்பில் மீசைக்கார எழுத்தாளரின் வரைந்த முக ஓவியம். சில கதைகளைப் படிக்கையில் தமிழக எழுத்தாளர் எனதான் நினைத்திருந்தேன். முழுமையாக புத்தகத்தை படிக்க முடியாதபடி பரிட்சை வந்தது. சில கதைகளிலேயே புத்தகத்தை அப்பாவின் அலமாரியில் வைத்துவிட்டேன்.

மிக சமீபத்தில்தான் அந்த எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தன் என்றும் அவர் மலேசியர் என்றும் வல்லினம் எழுத்தாளர் கலந்துரையாடலில் தெருந்தது. வானொலி பணியில் உள்ளவரென்பதும் அப்போதுதான் தெரிந்துக்கொண்டேன்.
முதலில் அவருடன் பேசுவதில் ஏனோ தயக்கம் இருந்தது, பின்னர் "தயா..." என அவர் குரலில் அழைத்துப்பேசும் மிடுக்கு அவருடன் கொஞ்சம் நெருக்கத்தைக் கொடுத்தது.

சிலரின் முகமோ, குரலோ, குறுஞ்செய்தியோ , பேச்சோ , எனக்கு உள்ளுக்குள் ஒரு உந்துதலைக் கொடுக்கும். அரு.சு.ஜீவானந்தனையும் அந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அவரின் ஆரம்பகால புகைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. இன்றைய இளைஞர்கள் கொடுக்கக்கூட புகைப்பட போஸ்களை அப்போதே கொடுத்திருப்பது எனக்குள் குதூகலத்தைக் கொடுத்தது.

அந்த புகைப்படங்களில் ஒன்று ஷேப்பியரின் வீட்டின் முன்பு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம். வழக்கமாக எழுத்தாளர் வீட்டில் படமெடுப்பவர்கள் அவரது படிக்கும் மேஜை, புத்தக அலமாரி, நாற்காலி போன்றவற்றிக்கு அருகில் நின்று படமெடுப்பார்கள். இவரோ அந்த காலத்திலேயே ஷேஸ்பியரின் கட்டிலின் அருகில் படமெடுத்திருக்கின்றார். இதை குறித்து அவரிடம் கேட்டுவிட்டு இருவரும் வெகுளியாய் சிரித்தோம். எழுத்தாளனை நமக்குள்ளாக சிரிக்க வைத்தால்தான் உண்டு போல என்ற எண்ணம் பகீரென மனதை உலுக்கியது.

அதையடுத்து எங்களின் உரையாடல் எழுத்தாளன் குறித்தும் அவனது குடும்பம் குறித்தும் விரிந்தது.  என் வாசிப்புகளைக் கேட்டுவிட்டு எழுந்துச்சென்றவர் எனக்கு அவரின் பரிசாக 'சிலுவைராஜ் சரித்திரம்' நாவலைக் கொடுத்தார். அவரின் கையொப்பத்தை கேட்டு வாங்கிக்கொண்டேன்.

அன்று தேடிய புத்தகம் இன்று கிடைத்ததில் மகிழ்ச்சி அதோடு அரு.சு.ஜீவானந்தன் கைகளில் கிடைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி. கூடவே அவர் கலக்கிக் கொடுத்த தேநீரும் தனி ருசியாகவே தெரிந்தது. நல்லவேளையாக எனது பையில் நான் எழுதிய , ' ஒளிபுகா இடங்களின் ஒலி' என்ற பத்திகள் தொகுப்பு நூல் இருந்தது. அவரிடம் கொடுத்தேன். தற்போது மீண்டும் அவர் சிறுகதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார் என்பதையும் உடன் பகிர்கின்றேன்.

இருவருக்கும் வயதில் வித்தியாசம் இருந்தாலும் இளமை ததும்ப விடைபெற்றேன் .

பிப்ரவரி 07, 2017

பொம்மிக்கு

இதானே சொர்க்க வாசல்
வழிவிடுங்கள்
பாதை மறந்துவிட்ட
மகளை தேடி வந்துள்ளேன்

இங்குதான் எங்காயினும் இருப்பாள்
அப்பா வந்திருப்பதாக சொல்லுங்கள்
ஓடி வருவாள்

பாதையை சுத்தம் செய்திடுங்கள்
என்னை கண்ட பின்
வேறெதையும் பார்க்காது
ஆட்டுக்குட்டியாய் துள்ளிவருவாள்

ஊதா வண்ண பூக்களின் இலைகளை காதுகளில் சொருகியிருப்பாள்
பூக்களை பறிப்பதை விரும்பாதவள்

இல்லை எனக்கு நம்பிக்கை இல்லை
நீங்கள் சொல்ல மாட்டீர்கள்
போறாமைக்காரர்கள்
வாழ்வின் வசந்தத்தை
மோட்சத்தின் குறுக்குவழியை
கடவுளின் அருளை

அத்தனை எளிதில் பாவியொருவன் பெற்றிடுவான் என்கிற அச்சம்

நானே போகிறேன்
வழி மறந்த மகளே
எங்கே இருக்கிறாய்

நீயற்ற என் உலகம்
நாதியற்று கிடக்கிறது

பூக்களேதும் பூப்பதில்லை
பூனைக்குட்டிகள் வருவதில்லை
வானவில்களை காணவில்லை
மழைத்தூறல் நனைக்கவில்லை

ஓடிவிளையாடிட ஆளில்லாததால் வீட்டுத்திடல் எங்கும் புதர்கள் மண்டியுள்ளன

நீ வருவாய் என வாசலுலேயே காத்திருக்கிறது காவல் தெய்வம்

உனக்காக வாங்கியுள்ள ஆடைகள் தூசடைந்து விட்டன

விளையாட்டுப்பொருட்கள் வண்ணம் இழந்துவிட்டன

புத்தகங்கள் மை மறைந்து பொலிவிழந்துவிட்டன

எந்த விளக்கும் வீட்டிருளை அகற்றவில்லை

தட்டுத்தடுமாறியே நடந்துக்கொண்டிருக்கிறேன் வாழ்வை நடத்திக்கொண்டிருக்கிறேன்

எங்கிருக்கிறாய் பொம்மி
எப்போது வருவாய்

சிறு குறிப்பாவது கொடுத்தனுப்பு
இவ்வுயிரை அந்நொடிவரை காப்பாற்றிக்கொள்கிறேன்

உனக்காவது என் வியர்வை வாசம் பிடிக்கட்டும்
என் சம்பாத்தியம் உன் மிட்டாய்களுக்காவது பயன்படட்டும்
மதியங்களில்  காத்திரு
நான் வருவதறிந்து
புன்னகை தா

என்னுடன் பேசு
என் கதைகளை விவாதி
என் மீதமர்ந்து சவாரி செய்
காதுகளை திருகி தவறு திருத்து
முதுகில் தட்டி பாராட்டு
தலையில் கொட்டி
ஓடிப்பிடித்து விளையாடு

இத்தனைக்கும் மேலாய்
நீயாவது என்னை நம்பு
வா மகளே

எஞ்சியிருக்கும் காலமென்ற மாயைத்திரையில் பிம்பம் கூட காட்டிச்செல்

நான் கண்ட எத்தனையோ ஊமை சாட்சி போல  உள்ளுக்குள்ளே அழுதுக்கொள்கிறேன்

அன்புள்ள பொம்மிக்கு

- தயாஜி




பிப்ரவரி 02, 2017

வாழ்வின் சூதாட்டம்

தற்போது மலேசிய முகநூலர்களிடம் அதிகம் பகிரப்படும் காணொளியாக இருக்கிறது திரு. Ben Nathan குறித்தான காணொளி.

காரில் இருந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கதவுக்கு வெளியில் நைந்து சில இடங்களில் கிழிந்தும் அழுக்கு படிந்த ஆடையுடன் மெலிந்த  , நீண்ட செம்பட்டை முடியுடன் தளர்ந்திருக்கும் ஒருவருடன் காரில் இருந்தபடியே ஒருவர் ஏதோ விசாரிக்கிறார். அந்த வயோதிகரும் தான் இன்னும் பாடிக் கொண்டிருப்பதாகவும் , வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் சொல்கிறார். காரில் இருந்து சிவப்பு வண்ண கடித உரை வெளியில் வருகிறது. பெருநாள் காலங்களில் பணம் வைத்து கொடுக்க பயன்படும்  சீனர்களின்  'அங் பாவ்' தாள் அது. வயோதிகர் நன்றி சொன்னவாரே அதனை வாங்கிக்கொள்கிறார்.

உண்மையில் அக்காணொளி பலரை போல என்னையும் அதிர்ச்சிக்குள்ளானது. 80ஆம் ஆண்டுகள் புகழ் பெற்ற பாடகரான அவரை இப்படி பார்க்கையில் யார் மனம்தான் கலங்காது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் மின்னல் பண்பலையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்காசாபுரியில் (அலுவல கட்டிடத்தின் பெயர் ), இருக்ககும் சில உணவகங்களில் பலதரப்பட்ட உணவுகள் இருக்கும். ஒருமுறை, எங்களுக்கு முன்பே பெருத்த பூனையொன்று சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து அண்டாவில் இருந்த கோழி குழம்பை நக்கிக்கொண்டிருந்ததை பார்த்ததில் இருந்து  வெளியில் சென்று சாப்பிடுவது எங்களுக்கு பழக்கமானது. பின்னர் அங்கு வளர்ந்த எலிகள் பூனைகளை ஓட ஓட விரட்டியதால் பூனைகளில் தொல்லை இல்லை என்கிறார்கள்.

அப்படி சாப்பிட செல்லும் பல சமயங்களில் திரு. Ben Nathan-ஐ பார்த்துள்ளேன். தீவிர சிந்தனையைக் காட்ட முகம் .  வாட்டசாட்டமான தேகம். கருத்து தொள்பட்டையில் விழுந்திருக்கும்  கேசம். கருப்பு கண்ணாடி. கையில் நெகிழியில் தேநீர். வேகமான நடை என இருப்பார்.

ஒருமுறை கூட தளர்ந்த நடையிலோ சோர்ந்துவிட்ட முகத்தையோ அடுத்தவரின் உதவியில் வாகனத்திலோ கண்டதில்லை . சில சமயம் வாகன நெரிசலில் அங்காசாபுரியில் இருந்து பிரிக்பீல்ட்ஸ்க்கு நாங்கள் செல்வதற்கு முன்பாக அவர் நடந்தே சென்றிருப்பார். ஏதோ ஆள் என்றுதான் முதலில் அவரை கடந்துச்சென்றேன்.

ஒரு சமயம் நண்பருடன் பயணிக்கையில் சாலையில் அவரைக் கண்டதும் அதிர்ச்சியாகிவிட்டார். நண்பர் கூறிய பின்னர்தான் தெரிந்தது. அவர் மிஸ்டர் Ben Nathan . 80களில் மலாய் ஆல்பம் செய்து புகழ் பெற்றவர் என்றும் அப்போது (இப்போதும்) புகழ் பெற்ற 'எலிகேட்ஸ்' குழுவுக்கு போட்டியாக வருவார் என பலராலும் கணிக்கப்பட்டவராம்.

மலேசிய தமிழ் இசை துறையில் இப்போது இருக்கும் புகழும் ஓரளவு பண புழக்கமும் அப்போது இல்லை. ஆனால் மலாய் இசை உலகம் அப்படியல்ல. அவர்கள் அன்று சம்பாதித்ததைதான் இன்றைய தமிழ் இசைக்கலைஞர்கள் சம்பாதிக்கின்றார்கள் எனவும் சொல்லலாம்.
அப்படிப்பட்ட சூழலில் ஓர் இளைஞர் ஒரே ஆலபத்தில் (குறுந்தட்டில்) மலேசிய குறிப்பாக மலாய் இசை துறையில் புயல் போல தோன்றியுள்ளார் என்றால் அவர் புகழும் சம்பாத்தியமும் எப்படியானதாக இருந்திருக்கும் என கொஞ்சம் கற்பனை செய்யுங்கள்.

ஆனால் அது எதுவும் அவர் வாழ்வில் நடந்திருக்கவில்லை. புயல் போல நுழைந்தவர் அதைவிட வேகமாக காணாமல் போயிருக்கிறார்.

அந்த இசைக்கலைஞன், அந்த பாடகன், அந்த கலைஞன் யாரும் அறிந்திடாத அரிதாரமொன்றை தனக்கே அணிந்துக்கொண்டான்.

இன்று ,
சமீபத்தில் வெளிவந்த திரு.Ben Nathan காணொளி அதிகமாக பகிரப்படுகிறது. தனது ரசிகர்களை மீண்டும் தன்னிடம் திரும்ப வைத்திருக்கிறது. அவருடன் மேடையில் ஒன்றாக பாடிய நாட்டின் புகழ்பெற்ற பாடகராக Datuk DJ Dev அவர்களே தேடிவந்து.    திரு.Ben Nathan-னிடம் எஞ்சியிருக்கும் நினைவுகளை சொல்ல வைக்கிறார். அவரது உறவினர்களின் உதவி மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். அதனை முகநூலில் live video (நேரடி ஒலிபரப்பாக) செய்திருக்கிறார்கள். திரு.Ben Nathan பேசும் ஆங்கிலம் அவர் கொண்டிருக்கும் தோரணையும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. ஆனாலும் காவல் துறையினர் அவரை அழைத்துச்செல்ல முயலும் போது அவர் அடைந்த பதட்டமும் கலவரமும் நம்மை கலங்கடிக்கிறது.  முழுமையாக அதனை பார்க்க முடியாதபடி வேதனைக்குள்ளாகிறேன்.

மலேசிய மலாய் நாளேடுகளிலும், இணைய இதழ்களிலும் இவர் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திரு.Ben Nathan-ஐ  காணொளி.மூலம் பரவலாக அறிய வைத்ததில் முகநூலில் இருக்கும் (mannin Mainthan ) மண்ணின் மைந்தன் பக்கம்தான் . அதன் குழுவினர்க்கு நன்றி. மீண்டும் திரு.Ben Nathan-னுடைய பாடல்கள் ஒரு சுற்று வரவேண்டும் என பிரார்த்திப்போம்.

ஏனோ தெரியவில்லை, திரு.Ben Nathan குறித்த காணொளியைக் கண்டதும் இதனை எழுத தோன்றியது.
யோசிக்கையில் தொலைத்த பின் தேடுவது ஒரு பக்கம். பக்கத்தில் இருப்பதையே தொலைத்துக்கொண்டிருப்பது மறுபக்கம் என வாழ்க்கை நாம்முடன் விளையாடிக்கொண்டிருப்பதாகவே நினைக்கவைக்கிறது.

அன்புடன் தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்