பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 14, 2016

கதை வாசிப்பு - 29 'எங்கே அந்த வெண்ணிலா'

கதை வாசிப்பு 29

ஞாயிறு மக்கள் ஓசையில் (11/12/2016) 'எங்கே அந்த வெண்ணிலா ' சிறுகதையை சரஸ்வதி வீரபுத்திரன் எழுதியுள்ளார்.

கதைச்சுருக்கம் கொடுப்பதற்கு பதிலாக இக்கதையை ஒற்றை வாக்கியத்தில் சொல்லிவிடலாம்.

கதை  - தனிமையில் இருக்கும் பெண்ணுக்கு முகநூலில் புதிய  தோழியால் நிம்மதி கிடைக்கின்ற போதில் அத்தோழி இறந்துவிட மீண்டும் தனிமையாகிறாள் நாயகி.

கதை குறித்து ,
 தற்சமயம் தொடர்பில் இல்லாமல் போன காவியாவின் நினைவில் இருந்து கதையை தொடங்கியுள்ளார் . அத்தொடக்கம் வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது. ஆனால் அந்த ஆவலை கடைசிவரை காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் கேள்வி.

கணவன் விட்டுச்சென்றுவிட்டார். பல்கலைக்கழகம் படிக்கும் பிள்ளைகளும் விடுமுறைக்கு மட்டுமே வருகிறார்கள். மற்றபடி தனிமையில் இருக்கும் நாயகிக்கு முகநூலிலும் காவியா நட்பாகிறாள். தனிமை குறித்தும் தனிமையில் நாயகியின் மனநிலை குறித்தும் சரியாக சொல்லப்படாததால் , முகநூல் நட்பு அவ்வளவு முக்கியத்துவமாகப்படவில்லை.

திடீரென தொடர்பில் இல்லாமல் போகும் காவியா குறித்து நாயகி முகநூலில் தேடாமல் தொடர்ந்து தொலைபேசியிலேயே அழைத்து முயல்கிறாள் நாயகி.

சில நாட்களுக்கு பிறகு காவியாவின் கைபேசியில் ஆணின் குரல் பதில் சொல்கிறது. காவியாவின் அண்ணன் என அறிமுகம் செய்துகொண்டு அந்நபர் பேசுவது நாடகத்தன்மையாக அமைந்துவிட்டது இக்கதையில் முக்கிய பலவீனம் என கருதுகிறேன்.

 இயல்பாகவே சிறுகதைகளில் வரும் உரையாடல்கள் மீது எழுதுகின்றவர்களுக்கு  அக்கறை குறைவாகவே இருக்கிறது .

பொதுவாக இங்கு, உரையாடல்களில் ஏற்படும் கவனக்குறைவு குறித்து பார்க்கலாம்.

1. உரையாடலுக்கும் கதைக்கும் ஒரே மொழிநடை.

2. உரையாடுபவர் எதார்த்தமாக பேசாமல் நாடகத்தன்மையாக பேசுவார்.

3. சில கதைகளுக்கு முக்கிய திருப்பத்தை உரையாடல் மூலம் கொடுப்பதாக நினைத்து சொதப்பியிருப்பார்கள்.

4. கதாப்பாத்திரத்தன்மைக்கு புறம்பாக அவர் உரையாடுவார்.

இவ்வளவு போதும் . கதைக்குச்செல்வோம்.

இக்கதையில் கூட முக்கிய திருப்பத்தைக் கொடுக்கக்கூடிய அண்ணனின் தொலைபேசி உரையாடல் அதன் தன்மையைக் காப்பாற்றவில்லை.

இறப்பதற்கு முன்பாக காவியா ஏன் நாயகிக்கு அத்தனை நெருக்கமாக அன்பு பாராட்டினாள்  என்ற கேள்வியை  அவளுக்கான இரங்கல் கவிதையை முகநூலில் போட்டுவிட்டு அவள் ஆத்மா சாந்தியடையும் என நம்பிக்கை கொள்வதாக கதையை முடித்திருக்கிறார். பலவீனமான முடிவை இக்கதை கொண்டிருக்கிறது.

இன்னும் முயன்றிருந்தால் சில இடங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் இக்கதை இன்னும்கூட சிறந்த கதையாக வந்திருக்கும் வாய்ப்புள்ளது.



- நன்றி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்