பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செப்டம்பர் 01, 2016

கதை வாசிப்பு 28- என்னமோ ஏதோ..?

கதை வாசிப்பு 28- என்னமோ ஏதோ..?


   ஆகஸ்ட் மாத மக்கள் ஓசையில் (2016), தேசிய தின சிறப்புச் சிறுகதையாக வந்துள்ள சிறுகதை 'என்னமோ, ஏதோ..?'.
சிப்பாங் எம்.ராஜசேகரன் எழுதியுள்ளார் . இவரின் எழுத்தை நாளிதழில் வாசிப்பது இதுதான் முதன் முறை . ஆனாலும் நம்பிக்கைக் கொடுத்துள்ளார் . சமீபத்தில் இப்படியான திரில்லர் கதையைப் நம் நாளிதழ்களில் வாசிக்கவில்லை. 


கதைச்சுருக்கம் 

   கோலாலம்பூர் பேரங்காடியில் மோட்டார் ஒன்று ஆபத்தைக் கொடுக்கும் விதமாக போகிறது. காவலர்களை அங்குள்ள சீசீடிவியை பார்க்கிறார்கள். பின்னோக்கி ஒவ்வொரு காட்சியாக பார்க்கும் அவர்களுக்கு அதிர்ச்சி கிடைக்கிறது . சந்தேகம் ஏற்பட மோட்டார் ஓட்டியை பின் தொடர்கிறார்கள். மோட்டார் அசுர வேகத்தில் தப்பித்துச் செல்கிறது .

   பேரங்காடியில் வெடிகுண்டு வைத்திருப்பது தெரிய வருகிறது. காவல்துறையினர் அவ்விடத்தில் இருந்து மக்களை அப்புறப்படுத்துகிறார்கள். அவ்விடம் பரபரப்பாகிறது .சமூக வலைத்தளங்களில் அம்மோட்டாரோட்டி குறித்து தகவல் அனுப்பப்படுகிறது . 

  அந்த மோட்டார் தப்பித்து, ஒற்றையடி பாதையில் சென்று நிற்கிறது . அங்கு ஒரு பெண் இவனுக்காக காத்திருக்கிறாள் . தன் காதலன் சில நாட்களாக தன்னிடம் பேசவில்லை என்பதால், தன்னை யாரோ கடத்திவிட்டார்கள் என குறுஞ்செய்தி அனுப்பியதாக சொல்லிச்சிரிக்கிறாள். அவன் அவளை அறைந்துவிடுகிறான். அவளுக்கு அவனது அறையும் அவனது பதட்டமும்  புதிதாக இருந்தது.

   மேலிடம் ஏற்கனவே அவனிடம் எச்சரிக்கை விட்டிருந்தது . உணர்ச்சிவசப்பட்டால் எடுத்த காரியம் முடிக்க முடியாதென. அங்கிருந்து அவன் விரைந்து செல்ல முயன்று விபத்துக்குள்ளாகி  மாட்டிக்கொள்கிறான்.

   காதலியும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறாள். வெளியூரில் இருந்து வந்த மாணவன் என மட்டுமே அவளுக்கு அவனைப்பற்றி தெரிந்துள்ளது. பணக்கார குடும்பம் என்பதால் அவள் விடுவிக்கப்படுகிறாள். காரில் செல்லும்போதும் இனி அவன் குறித்து பேசக்கூடாது என தந்தை கட்டளையிட்டுவிட்டார்.

  அவன் சுயநினைவு இன்றி பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனையில் இருக்கிறான். அவனது தலைவன் அவனை கொள்வதற்காக ஏற்பாடுகளை செய்யச்சொல்லிவிட்டான். 

  சிகிச்சை அவனை சுயநினைவுக்கு அழைத்துவருகிறது. காவல் துறையினருக்கு புது நம்பிக்கை கிடைக்கிறது . நிறைவாக அந்த காலையில் பெரங்காடி பாதை திறக்கப்படுகிறது. நாட்டில் 59 தின சுதந்திரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


கதையைக்குறித்து 

  இக்கதையில் இருக்கும் பலவீனங்களை முதலில் பார்க்கலாம்.திரில்லர் கதைகளுக்கு பரபரப்பு மிக முக்கியம் . அந்த பரபரப்பு கொடுக்கும் சுவாரஷ்யம் மிக முக்கியம் . இக்கதையில்  பெரும்பாலான வாக்கியங்கள் நீளமாகவே உள்ளன.

  உதாரணமாக முதல் பத்தியைச் சொல்லலாம். தொடக்கமே பரபரப்பில் இருப்பது அவசியம். இதன் தொடக்கம் ஆறு வரிகளாக ஒரே வாக்கியத்தில் அமைந்திருக்கிறது . நீளத்தை உடைத்து மூன்று வாக்கியங்களாக ஆக்கியிருக்கலாம். இவ்வகை சிக்கல் கதையில் ஆங்காங்கே தென்பட்டு விறுவிறுப்பை தடை செய்கிறது.

   இக்கதையின் பலம் இக்கதையில் இருக்கும் வேகம். 59வது சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்கு முன் நாட்டின் அமைதியை கெடுக்கும் கூட்டம் குறித்து இக்கதை பேசுகிறது . பணக்கார குடும்பம் என்பதால் விசாரணையில் இருந்து தப்பிப்பது,  வெளியூரில் இருந்து வந்திருப்பவன் குறித்து எதுவும் தெரியாமல் காதல் வலையில் விழுவது போன்றவையை இக்கதை கவனப்படுத்துகிறது.

   இக்கதை என்னை கவர்ந்திருப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு. பொதுவானப்பார்வையில் காவல்துறையினரின் சாகசங்கள் குறித்து சொல்வதுபோல இருக்கிறது . ஆனால் அது அப்படியல்ல என்றே எண்ணுகிறேன்.

  அந்த மோட்டார் அசுர வேகத்தில் மற்றவருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சென்றதுதான் காவல் துறைக்கு சந்தேகத்தைக் கொடுத்தது . அதன் பிறகே சீசீடிவியை பார்த்தார்கள். பின்னர் அதனைப் பின்னோக்கிப் பார்த்து அவன் குண்டு வைத்தது கண்டுபிடிக்கப்படுகிறது . 

  அந்த மோட்டார்க்காரனுக்கு அவனது காதலி ஆபத்தில் இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியதுதான் அவனது அந்த பரபரப்புக்கும் வேகத்துக்கும் காரணம் . இல்லையெனில் எந்த பரபரப்பும் இன்றி சகஜமாக குண்டு வைந்துவிட்டு சாகவாசமாக வெளிவந்து அந்த குண்டை வெடிக்க வைத்திருப்பான் . 
நாட்டின் சுதந்திரம் உயிர்பலிகளைக் கொண்டிருக்கும். மறைமுகமாக இச்சிறுகதை எதை விமர்சிக்கிறது என வாசக மனம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நிறைவாக,

  எழுத்தாளர் தொடர்ந்து எழுதவேண்டும் . அவரிடம் இருந்து இன்னும் எதிர்ப்பார்க்கலாம்.

- தயாஜி-

கதை வாசிப்பு 27 - குளவி

 கதை வாசிப்பு 27 - குளவி

ஆகஸ்ட் மாத (2016) காலச்சுவடு இதழில் உமா மகேஸ்வரியின் குளவி என்னும் சிறுகதை வந்துள்ளது. மூன்று பக்க கதைதான்.  

   இன்னமும் பெண்களை அவளின் உடல் கொண்டு அறியும் ஆண்களின் மனப்போக்கையும் அதன் மூலம் பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் துன்பத்தையும் காட்டுகிறது.

கதை.

   அழைப்பு மணியோசையுடன் கதை தொடங்குகின்றது. கதவை திறக்க யாருமில்லாதது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. குழப்பத்தில் இருப்பவளின் காதில் குளவியின் ரீங்காரம் கேட்கிறது. பின்னர் வீட்டில் குளவி கூடை கண்டுபிடிக்கிறாள். அதனை சுத்தம் செய்ய சொல்கிறாள். குளவி கூடு கட்டினால் நல்லது என சொல்லும் வேலைக்காரியிடம் அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்கிறாள். 

    குளவி, மணல் , கூடு போன்ற விசித்திர கனவுகளால் இம்சைக்கு ஆளாகிறாள். கணவனிடம் சொல்கிறாள். கணவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மகன் பள்ளிக்கும் கணவன் அலுவலமும் செல்கிறார்கள்.

 மருத்துவ பரிசோதனைக்கு செல்கிறாள். சிகிச்சை தன்னை பாதியாக்கிவிட்டதை உணர்கிறாள். இனி அவள் பாதிப்பெண்தான் என்கிறாள்.

   இரவில் அவளது கழுத்தில் முத்தமிட்டு ரவிக்கையின் பித்தான்களை அவிழ்த்த கணவன் அரைபட்டவன் போல அவளிடமிருந்து விலகி அறையைவிட்டு வெளியேறுகிறான். அவள் மெதுவாக எழுந்து மேலாடையை விலக்கி கண்ணாடி முன் நிற்கிறாள். கரிய வெற்றிடம் தெரிய அவள் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

கதையைக்குறித்து,

 சட்டென இக்கதை எனக்கு பிடிகொடுக்கவில்லை. இருந்தும் ஏதோ ஒன்றைத் தவறவிடக்கூடாதென எனக்கு தோன்றியது. மீண்டும் கதையை ஒவ்வொரு வரியாக படிக்க அரம்பித்தேன். இப்போது கதையின் கடைசி வரை என் முகத்திலும் அரைந்தது.

   கதையை புரிந்துக்கொண்டேன். அவள், ஏதோ காரணத்தால் மார்பகங்கள் அகற்றப்பட்டுவிட்டாள். குளவி கூடை தன் மார்பின் படிமமாகத்தான் அவள் பார்க்கிறாள். அதுதான் அவளின் உளவியல் சிக்கலாக அமைந்துவிட்டிருக்கிறது. தன் உடலில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட மார்பகத்தால் தான் இனி பாதிப்பெண்தான் என அவளை நம்ப வைத்திருப்பது சமூக அவலங்களில் ஒன்றாகவே பார்க்கிறேன். 

  மார்பக புற்றுநோய்களின் விளைவாக மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண்கள் மேலாடையின்றி புகைப்படம் எடுத்து விழிப்புணர்வுக்காக பிரசுரிக்கும் இக்காலத்திலும் ஒரு பெண்ணை அவளில் உடல் மூலமே அவளை பெண்ணாக பாவிக்கும் அவல நிலையைத்தான் இக்கதை சொல்கிறது. குழந்தை பெற்ற பின்னரும் கூட அவளிடமிருந்து விலகிப்போகும் கணவன் தான் நம் சமூகத்தின்  உருவம். 
இதுதான் காரணம் என சொல்லியிருந்தால் கூட இக்கதை நம்மை இவ்வாறு யோசிக்க வைத்திருக்காது.

   சொல்லவந்த விசயத்தை சொல்லாமல் சுற்றியும் அமைந்துள்ள சிக்கலைச் சொல்லி வாசகனை அதன் மையத்தை நோக்கி அழைத்துச்செல்வதில் எழுத்தாளர் வெற்றிகண்டுள்ளார். 

 நல்ல கதையைப் படித்துவிட்டத் திருப்தியை வாசக மனம் உணர்கிறது.


-தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்