பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 08, 2016

உன் சக பயணி





போராடிக்கொண்டே இரு
உனக்காக பேசிவர்கள் எல்லாம்
உனக்காகவே பேசியவர்கள் அல்ல

போராடிக்கொண்டே இரு
உன்னோடு நடந்து வர
வெற்றி தோல்விக்கு வழி விடு
விழுந்தாலும் எழுந்தாலும்


போராடிக்கொண்டே இரு
உனக்காக வாழ்விருக்கும்
உனக்கெனவே வாய்ப்பிருக்கும்

போராடிக்கொண்டே இரு
தூங்கிடும் நேரத்திலும்
கனவுகளை கணக்கிடு
கண்டுவிட்ட கனவுகளை
கண்முன்னே நடத்திட

போராடிக்கொண்டே இரு
மறையும் சூரியன் மறுபடிமறுபடி எழுது
மனதின் குறிப்புகளை முயன்று நீ எழுது

போராடிக்கொண்டே இரு
பூக்கள் நிறைந்தாலும்
பூகம்பம் புகுந்தாலும்
வழிகள் வேறுல்லை நமக்கு
நீ

போராடிக்கொண்டே இரு
போராட்டம் என்பது போர் தொடுப்பதல்ல
போராட்டம் என்பது தேர் இழுப்பதல்ல
போராட்டம் என்பது உயிர் கொலையல்ல
போராட்டம் என்பது விட்டு ஓடுவதல்ல
போராட்டம் என்பது பழிக்கு பழியல்ல
போராட்டம் என்பது ஆயுதம் பிடிப்பதல்ல

போராட்டம் என்பது என்ன..?
கண்ணாடி முன் நின்று
தற்காலிக நிலையோடு
சுயத்தை வெளிகொண்டு
வருங்கால உன்னை
அதன் வழி அறிதலே போராட்டம்
அறிந்த உன்னை
உலகுக்கு அறிமுகம் செய்வதே போராட்டம்
அறிமுகம் ஆனப்பின்னே அழியாமல் இருப்பதே போராட்டம்
அழியாமலிருக்கும் உன்னை ஆளுக்கு ஆள் பின்தொடர்வதே போராட்டம்

போராடிக்கொண்டே இரு
உதைத்த சொற்களை கொண்டு
உனது சொல்லை நடத்து
உதைத்த கால்களை கொண்டு
உனது வழிகளை கவனி
முதுகில் குத்தியவர்க்கு முகத்தினை காட்டு
கருவிழி கண்டு அவர்கள்
மூச்சடைத்து போவார்கள்

பயந்து ஓடாதே
உடனேவும் பாயாதே
பொறுமை கொள்
போராட்டத்தில் பால பாடம் பொறுமை

போராடிக்கொண்டே இரு
முற்றுபுள்ளிகளை கடந்தும் போராடு
வாழுவரை வாசித்துக்கொண்டே இரு
வாழ்ந்த பின்னரும் வாசிக்கப்படுவனாய் இரு

எதையும் மறக்காதே
எக்காரணமும் வெறுக்காதே

போராடிக்கொண்டே இரு
புகைப்படங்களை சேகரி
ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயரிடு
பெயருக்கு பின்னால் நடந்ததை நினைவு கொள்
கொண்ட நினைவுகளில் பாடம் காண்
தோல்விகள் எல்லாம் துணையாய் வரும்
வெற்றிகள் உன்னில் வேர்வையாய்
வெளிபடட்டும்

சோகம் கொள்ளாதே
சோறுக்கு வருந்தாதே
சொர்க்கமோ நரகமோ
இந்த நொடியில் இரண்டையும்
நீயே நிர்வகி

பூக்கள் மட்டும் போதாது
முட்களும் கைகளை கிழிக்கட்டும்
வலி எல்லாம் வடுக்கள் ஆகும்
வடுக்கள் எல்லாம் தழுப்புகள் ஆகும்
தழும்புகள் சேர்ந்து காப்பு காய்க்கும்
காப்புகாய்த்திட அவ்விடம் பலமாகும்
அதுதான் புது வரவாகும்
அதுவே ஒரு வரமாகும்

யார் பேச்சிலும் மயங்காதே
யார் பேச்சையும் மறுக்காதே

ஏது செய்தாலும் நிதானி
உன் வெற்றிக்கு நீதான் இனி

இதுவரை சொன்ன நான் யார்
இத்தனை சொல்ல நான் யார்

உன் சக பயணி

- தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்