பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 11, 2015

உலகத்தர பேய்ப்பட விமர்சன பேருரையின் சிறு துளி




    பின்ன என்னங்க நாட்டுல யார் யாரோ படங்களுக்கு விமர்சனம் எழுதறாங்க. நம்மலும் எழுதினாதானே உலக எழுத்தாளர்களின் வரிசையில் கடைசிக்கு இரண்டாவது இடமாவது கிடைக்கும். அதென்னப்பா கடைசிக்கு இரண்டாவது இடம்ன்னா..? ஒன்னுமில்ல நம்ம கட்டுரையை படிச்சு உங்களுக்குள்ள இருக்கிற உலகத்தர பேய்ப்பட விமர்சன சிறு துளியில இருந்து  இன்னொரு துளி வரலாமில்ல. அப்போ எனக்கு அடுத்த இடம் உங்களுக்குத்தானே. இப்பல்லாம் உலக சினிமா பத்தி ஒன்னு ரெண்டு கட்டுரை எழுதியிருந்தாதான் எழுத்தாளர்களா மத்தவங்க ஒப்புக்குவாங்களாமே? யார் கண்டது அன்னிக்கு நான் லீவுல இருந்திருப்பேன்.

       வீட்டம்மாவுக்கும் எனக்கும் ஒன்னா போய் தியேட்டர்ல படம் பார்ப்பதில் சிக்கல் இருக்கு. ஏன்னா, எங்க கல்யாணத்துக்கு பிறகு பார்த்த முதல் படமே சிம்பு நடிச்ச ’ஒஸ்தி’தான். அன்னிக்கு ஏற்பட்ட பீதியை இன்னவரை என்னால சரிகட்ட முடியல. தியேட்டருக்கு போலாமான்னு கேட்டதும் மறுபடியும் பீதியாகிடறா. ஆமா இப்போ சிம்புவும் அனிருத்தும் அசிங்கமா கெட்டவார்த்தை போட்டு பாட்டு போட்டிருக்காங்களாமே. அனிருத் பையன் நல்லாத்தானே இருந்தான். சரிவிடுங்க, பாவம் சிம்பு இப்போ அவருக்கு இருக்கிறது ரெண்டு வழிதான். ஒன்னு தானாய் சாகறது இன்னொன்னு நாமா சேர்ந்து சாகடிக்கிறது. இதை மீறி எதுவும் நடக்கலாங்க. ஏன்னா அவருக்கு நடிக்க தெரியாதுன்னு அவரே சொன்னதில் இருக்கற நேர்மை இன்னமும் வேலை செய்யலாமில்ல. எப்படியே நயந்தாரா நல்லா வந்துட்டா ஹன்சிக்காவும் நல்லா வந்துக்கிட்டு இருக்கா நமக்கு பெருசா என்னங்க ஆசை இருக்க போகுது. அந்த மனுசன் கைப்பட்டது நல்லா வந்திடுது அவருதான் நாறிகிட்டு இருக்காருன்னு யாரோ கிளப்பிவிட்ட புரளிகளை நாம நம்புவோமா சொல்லுங்க.  

        உலக சினிமான்னு சொல்லிட்டு சிம்பு புராணத்தை சொல்றதுக்கும் ஒரு காரணம் இருக்குங்க. ஏன்னா என்னோட அடுத்த கட்டுரை சிம்புவை பற்றியதுதான். தலைப்பை கூட யோசிச்சிட்டேன். ’பழம் தின்னி பழகிய பொக்கை வாய் அணில்’.

       அன்னிக்கு நல்ல வாய்ப்பு. எதார்த்தமா சரி படம் பாக்க போலாம் வரிங்யான்னு கேட்டதற்கு, கொஞ்ச்ம வேலை இருக்கு நீங்க போய்ட்டு வாங்கன்னு சொல்லிட்டா. சும்மாவே நம்ம அலையுவோம். வீட்டம்மாவே போக சொன்ன பிறகு தியேட்டருக்கு போகாமலா இருப்போம். கிளம்பினேன் பாருங்க தியேட்டருக்கு என்னா நடை என்னா உடைன்னு நினைக்கறிங்க. சும்மா அசந்திருவிங்க.

     கவுண்டரில் இருந்த பொண்ணு பார்க்கிறதுக்கு சுமாரா இருந்தாலும் கொஞ்சம் சிரிச்சிருந்தா செம்மையா இருந்திருக்கும். அதுக்கு என்னா பிரச்சனையோ ஏது பிரச்சனையோ, சிரிக்கவே மாட்டுது. என்னா படம் இப்போ இருக்குன்னு கேட்டேன். இல்லங்க… தமிழ் படம் இப்போ இல்லைங்கன்னு சொல்லிடுச்சி. அட என்னைய பார்த்தா தமிழ் படம் பார்க்க வந்தவன் மாதிரியா இருக்கு ஏன் நான் இங்கிலிஸ் ஜப்பான் ஜெர்மன் படமெல்லாம் பார்க்க மாட்டனா? என சிரித்துக் கொண்டே கேட்டுட்டேன். என்னா நினைச்சதோ ஏது நினைச்சதோ தெரியல, இந்தாங்க இது பேய்படம் அதுதான் இப்போ இருக்குன்னு சொன்னாள், நம்ம விடுவோமா, பேய் படமா… நம்மல்லாம் பேய்ங்க கூடவே பாயசம் சாப்டவங்கன்னு சொல்லி பேய் படத்துக்கு டிக்கட் வாங்க கம்பியூட்டர் ஸ்கீரீனை பார்த்தேன். மொத்தமே பதினைஞ்சி பேருதான் இருந்தாங்க. சரி நாட்டுல எவன் நல்ல படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கறான்னு கடைசிக்கு மூனாவது வரிசையில் ஒரு டிக்கட்ன்னு சொன்னேன். 

   இன்னும் அரைமணி நேரம் இருக்கு சும்மா இருக்கிறதுதான் நமக்கு கஷ்டமாச்சே. சரின்னு சுத்தியும்முத்தியும் பார்த்தேன். கவுண்டருக்கு பக்கத்துல ஒரு பொண்ணு நல்லா இருந்தா டக்குன்னு ஸ்டைலா கண்ணாடிய கழட்டி துடச்சிட்டு போட்டேன். அட கவுண்டரில் டிக்கட் கொடுத்த பொண்ணு. இதுக்குத்தான் அப்பப்போ கண்ணாடியை துடைச்சி போடனும்னு சொல்றது.

     அரங்கு திறந்துட்டாங்கன்னு தெரிந்தது. உள்ளே நடக்கும் பொழுதே கவனித்தேன் இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தும் ஆட்களை யாரையும் காணோம். சரி யார்தான் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னமே வரா. படம் ஆரம்பிச்சி எதாவது முக்கியமான சீன் போகும்போதுதான் வந்து அப்படியும் இப்படியும் நடந்து இம்சிப்பானுங்க. இருட்டுல காலை மிதிக்கிறதை கூட மன்னிக்கலாம். ஆனால் நம்ம காலை மிதிச்சி பக்கத்துல இருக்கிறவனுக்கு சாரி சொல்லிட்டு போறதுதான் பொறுத்துக்கவே முடியாது. என்னமோ ஆஸ்கார் கொடுக்கிற மாதிரி பக்கத்துல உள்ளவனும் தலையாட்டுவான் பாருங்க. இதையெல்லாம் சொல்லவோ எழுதவோ முடியாதுங்க மிதி பட்டாதான் தெரியும்னு வைங்க.

      ஆமா, என்ன பேய்படம்னு சொல்லிட்டேன் என்ன பேருன்னு சொல்லலைதானே. இப்போ சொல்லிடறேன். THE RING, DARK WATER படங்களை இயக்கிவரின் படம். ஜப்பானிய ,’ANNABELLE’ என்ற அடைமொழி கொண்ட படம். படத்தோட பேரு , GHOST THEATER. பேய் திரையரங்கம். வெள்ளைக்கார ANNABELLEஅதான் நம்மல ஏமாத்திடுச்சி, இது ஜப்பான்காரன்களோட  ANNABELLE  பயங்கரமா இருக்குமே, நாம வேற தனியா வந்திருக்கோமேன்னு நினைச்சி தியேட்டரில் நுழைஞ்சேன். 

    நல்லவேலையாக உள்ளே பேச்சு சத்தம் கேட்குது. நமக்கு முன்னமே வந்திருக்காங்கன்னா என்னா தைரியசாலிங்களா இருப்பாங்கன்னு கதவை திறந்து உள்ளே போனாக்கா, கொய்யால உள்ள ஒருத்தனையும் காணோம். நீங்களே யோசிச்சி பாருங்க. பேய்படம், யாருமில்லாத தியேட்டர், இருட்டு, ஒரே ஒரு நானு. நான் தைரியசாலிதான் இல்லைங்கன்னல. ஆனாலும் இருட்டுன்னா கால் தடுக்கி எங்கயும் விழுந்திடுவேனோன்ற பயமாவது இருக்கதானே செய்யும்.

       சரி வந்தாச்சி திரும்ப வெளிய போன அசிங்கமாச்சேன்னு , நாற்காலிய தேடி உட்கார்ந்துட்டேன். அப்பதான் ஒரு யோசனை யாரும் உள்ளே வந்து இருட்டில் நம்மல பார்த்து பயந்துட்டா என்ன செய்றது. டக்குன்னு போனை எடுத்து மூஞ்சில விளக்கு வெளிச்சத்தை படவச்சிக்கிட்டேன். அப்பறமா இன்னொரு யோசனை காலம் காலமா முகத்துல விளக்கை அடிச்சிதானே நமக்கு பயம் காட்டியிருக்குன்னு, போனை அந்தப்பக்கமா திருப்பி எதிர் நாற்காலையில் வெளிச்சம் அடிச்சேன்.

      நல்ல நாள்லயே தியேட்டர்ல படத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி விளம்பர்த்தை காட்டி கொல்லுவானுங்க. ஆளே இல்லாத தியேட்டர்ல எதுவுமே காட்டாம எனக்கு பயம் காட்டறானுங்களேன்னு நினைச்ச பாவம்தான் படால்னு திரையில வெள்ளையா தெரிஞ்சது. பெருசா தெரியாம சின்னதா மட்டும் வெள்ளையா எதுவும் தெரிஞ்சிருந்தா அங்கயே மயக்கம் போட்டிருப்பேன். 

     எப்படியோ படம் போட்டாச்சி. ஒரு முறை திரும்பி பாத்தேன். டிக்கட் வாங்கன பதினைஞ்சி பேரையும் காணோம். சரி அதான் படம் போட்டாச்சேன்னு பார்த்தேன். அப்பதான் தெரிஞ்சது, இது ஜப்பான்காரன்களோட அனபெல்லா படமில்ல, ஜப்பான் படம்னு. டிக்கட் கவுண்டர்ல ஒரு பேச்சுக்கு சொன்னேன், ஜப்பான் படம் ஜெர்மன் படமெல்லாம் பார்ப்பேன்னு. அந்த பொண்ணு நெசமாவே ஜப்பான் படத்துக்குத்தான் டிக்கட் கொடுத்திருக்கு. நானா தலைய கொடுத்தனா இல்ல தானாவே தலை போய்டுச்சான்னு தெரியல.

    படத்துல பேயை தவிர மற்ற எல்லாருமே ஒரே மாதிரிதான் இருந்தாங்க. ஆம்பள பொம்பள வித்தியாசத்தை தவிர யார் யார், யார் யாருன்னு கண்டேபிடிக்க முடியல. என்ன இருந்தாலும் நம்ம படம் போல வருமா சொல்லுங்க, நம்ம, ’கறுப்பு பேரழகி’ன்னு பாடினாலும் சிவப்பா உள்ள பொண்ணுகிட்டதானே பாடுவோம்.

    கதை என்னமோ ரொம்ப சிம்பள்தாங்க. தியேட்டரில் ஒரு நாடகம் போடப்போறாங்க. தன்னை இளைமையா வச்சிக்க , வயசு பொண்ணுங்க ரத்தத்தை குடிச்சி அதில் குளிக்கும் ஒரு அரசி. அவ கூடவே ஒரு அழகான ஆளுயர பொம்மை. நாடகத்துக்காக அந்த பொம்மையை பல இடங்களில் தேடி கண்டுபிடிப்பாங்க. 

    அந்த பொம்மைக்கு ஒரு கதை இருக்கும். விபத்தில் சிக்கி உருகுலைந்து போனவளுக்காக, அவளை போலவே உருவில் பொம்மையை செய்து அடக்கம் செய்யும் சமயம் அந்த பொம்மைக்கு உயிர் வந்து தன்னை உருவாக்கியவனின் இரண்டு மகள்களை இளமையை உரிஞ்சி கொன்னுடுது. 

    அப்பறம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். திரையரங்கில் இருக்கற எல்லா நடிகர்களும் மண்டைய போட்டிருப்பாங்க நாயகனும் நாயகனும் பேயோட மண்டைலயே போட்டிருப்பாங்க. அவ்வளவுதான் கதைன்னாலும் ஜப்பான்காரன் அப்பப்போ பயமுறுத்தியிருக்கான்னுதான் சொல்லனும். சரிங்க, ’உலகத்தர பேய்ப்பட விமர்சன பேருரையின் சிறு துளி’ல இவ்வளவுதான் சொல்லியிருக்கேன்னு பார்க்கறிங்களா, அதான் முன்னமே சொல்லிட்டேன்ல. பேருரையின் சிறு துளின்னு.

 சிறு துளியில் இவ்வளவு வந்ததே எவ்வளவு பெரிய விசியம்னு எனக்குதானே தெரியும். என்ன இருந்தாலும் உலக சினிமா விமர்சனத்துல கடைசியா ஒரு ’ப்பஞ்சு’ வைக்கனுமில்ல. அப்பதான் இலக்கிய உலகம் என்னையும் ஒரு எழுத்தாளனா ஒப்புக்கும். மனிதர்களுக்காக பேய் படங்களை எடுத்தவங்களை பார்த்திருப்பிங்க, ஆனா பேய்களுக்காக படம் எடுத்தவரை பார்த்திருக்கிங்களா. அது இவராத்தான் இருக்கனும். பின்ன என்னங்க. தியேட்டரில் எல்லாமே காலி இடங்களாக இருக்கறப்போ எப்படி எனக்கு பேச்சு சத்தம் கேட்டிருக்கும். அப்போ அந்த பதினைந்து பேரும் முன்னமே வந்து அமர்ந்துட்டாங்களோ?

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்