பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பிப்ரவரி 18, 2014

கண்றாவிகளைச் சுமக்கும் கலாச்சாரம்

(கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும் என்ற சிறுகதையினை ஒட்டி , எழுதிய கட்டுரை )

நேற்று முன்தினம் முக நூலில் என் அன்புக்கினிய தோழி மாலா ஒரு கேள்வியை முன்வைத்தாள்.
” மலேசிய நாட்டில் இதுபோன்ற கலாச்சாரங்களை வரவேற்கலாமா?” என்பது அக்கேள்வியின் சாரமாக இருந்தது. தாயாஜியின் சிறுகதையே இவரின் கேள்விக்குப் பின்னணியாக இருந்தது.
 
இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதற்குப் பதிலாக அவளிடம் நான் கேள்வியை எழுப்பினேன்.
“மலேசியா நாட்டில் ஏய்ட்ஸ் நோய் இல்லையா? விபச்சார விடுதிகள் இல்லையா?”
 
கலாச்சாரம் கட்டிக் காக்கும் மலேசியா என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கலாம். உளவியல் அடிப்படையில் பல மன சிக்கல்கள் நம் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தாய்மைக்கு மதிப்பளிக்கும் சமுதாயமாக நாம் இருகின்றோம் என்றால் ஏன் கண் முன் தெரியும் விபச்சார விடுதிகளுக்கு எதிராக கோஷம் போடுவதில்லை.
 
தாய்மை உன்னதமானது என்று போற்றுகிறோம். ஆனால் சிசு கொலையைப் புரிவதும் தாய்மைதானே? லெஸ்பியன் எனும் பெண்களோடு பெண்கள் உறவு, ஹோமோ எனும் ஆண்களோடு ஆண்கள் உறவு, குறைந்த வயது கொண்டவர்களோடு உறவு, மிருகங்களோடு உறவு என்று கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் மலேசியாவில் இது போன்ற உறவுகள் நடந்துள்ளது என்பதை நாம் அறிந்திருக்கவில்லையா என்ன?
 
சமீபத்தில் தகப்பனும் மகளும் காதலன் காதலியாக இருந்தார்கள் என்ற செய்தி நாளேடுகளில் பிரசுரமானதைக் கலாச்சார சிதைவு என்று ஏன் அதனைக் கட்டிக் காப்பவர்கள் கூச்சலிடவில்லை. இது போன்ற செய்திகளை பிரசுரம் செய்யாதீர்கள். இது நமது கலாசாரத்துக்கு எதிரானது என்று ஏன் நல்லவர்கள் பத்திரிகைகளுக்கு எதிராக அறிக்கை விடவில்லை.
 
நடந்த சம்பவத்தைப் பதிவாக்குவது நாளேட்டின் கடமை. சமூகச் சிக்கல்களில் உழன்று தவிக்கும் உள்ளங்களின் அலைக்கழிப்பை பொதுவுக்கு கொண்டுவருவது எழுத்தாளனின் கடமை. அதனை வாசித்து விமர்சனங்களை முன் வைப்பது வாசகனின் கடமை.
 
கடவுள் முதன் முதலில் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்பதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் அறிவு, அடுத்தடுத்து மனிதனின் இனப்பெருக்கம் அவர்களுக்குள்ளேயே நடந்த உறவில் பெருகியது என்பதை சொல்லப்போவோமானால் நம்மை மனநோயாளி என்றும், கலாச்சாரத்தை சிதைக்க வந்தவன் என்றும் பெயர் சூட்டிவிடுவார்கள் “நல்லவர்கள்”
 
மகளைக் கெடுக்கும் தந்தை, தாயை கொலை செய்யும் மகன்,மாணவனை வல்லுறவுக்கு ஈடுபடுத்திய ஆசிரியை, பேத்தியை வாய்வழி உறவுக்கு ஈடுபடுத்திய தாத்தா என்றெல்லாம் பல சம்பவங்களை நாளிதழில் படித்துப் பழகிப் போன நமக்கு, தாய் குளிக்கும் போது எட்டிப்பார்த்த மனசிக்கல் கொண்ட மகன் என்று புனைவு மொழியில் ஒரு சம்பவம் அச்சில் ஏற்றிவிடும்போது மனம் ஏற்றுக் கொள்ளாமல் வாந்தி எடுக்கிறது. நாம் வாந்தி எடுப்பதால் அந்தச் சம்பவம் அசிங்கமான கற்பனை என்றும் ஒதுக்கிவிடவும் முடியாது. இதை மனச் சிக்கலின் ஒரு கூறாகவும், பாதிக்கப்பட்டவனை ஒரு நோயாளியாகவும் நாம் கவனிக்கவேண்டியது அவசியம்.
 
கோலாலம்பூரிலிருந்து வந்த ஒரு சிநேகிதி என்னிடம் ஒரு சம்பவத்தைச் சொன்னாள். அதாவது உடன் பிறந்த அண்ணனும், தங்கையும் திருமணம் செய்து கணவன், மனைவியாக வாழ்கிறார்கள் என்று. இந்த கதையைக் கேட்டதும் எனக்கு வாந்தி வருவதுபோல்தான் இருந்தது. ஆனால் இந்தச் சம்பவம் உண்மையாக இந்த மலேசிய மண்ணில் நடந்துள்ளதே! எப்படி?
 
சிறுவயதில் அவர்கள் அனுபவித்த, பார்த்த சில நேரடிச் சம்பவங்கள் அவர்களின் பழக்கத்துக்கு வந்து பிறகு அதுவே அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் திருமணம் செய்யும் கட்டாயத்துக்கு வந்துவிட்டது என்று அந்த சிநேகிதி என்னிடம் சொன்னாள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து பிள்ளையையும் பெற்றுக் கொண்டுள்ளார்கள. இரவு நேரத்தில் முகத்தைப் பார்க்கக் கூடாது என்பதால் விளக்குகளை அனைத்துவிட்டுத்தான் கூடுவார்களாம். இதனை அந்தப் பெண்ணே என் சிநேகிதியிடம் கூறியுள்ளதாக எனக்கு கூறப்பட்டது.
 
அவர்கள் யார் என்று அவர்களைத் தேடுவதைவிட இதுபோன்ற பல மன சிக்கல்கள் நமது சமூகத்தில் உள்ளன என்பதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். கலாச்சாரம் என்று பேசி நடப்பதை ஒதுக்கி வைப்பதற்கு முன், ஆதிகால மனிதனாக இருந்தவனுக்குக் காட்டுமிராண்டித்தனம் உடலில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும். அதனால்தான் நடக்கமுடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத, வரம்புக்கு மீறிய பல சம்பவங்கள் உலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். சமயம் மனிதனை தெய்வமாக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், சில சமயங்களில் சமய வாதிகளும் காவிகளை காமத்துக்கு காவு கொடுத்திருப்பதையும் நாம் படித்திருக்கிறோம், காணொளியிலும் கண் வலிக்கப் பார்த்திருக்கிறோம். ஆலய கர்ப்பக் கிரகத்தில் உடலுறவு, எத்தனயோ “ஆனந்த” சாமியார்களின் உல்லாச நேரங்கள் ஒளிப்பதிவு, என்று பல “கச முசா” செய்திகளை நாம் கசக்கி கசக்கி படிக்கவில்லையா?
 
அன்று பார்த்த நிர்வாணப் படங்கள், கேட்ட நிர்வாணக் கதைகள், யாவற்றையும் மனதில் ஒளித்துவைத்துக் கொண்டு மணி அடிப்பதில் தப்பு கிடையாது. ஆனால் மணி அடிப்பவர்கள் தங்களை புனிதமாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்ததை பிறர் செய்யும் போது உடனே உத்தம நீதிமன்றத்தில் ஆயுட்கால நீதிபதியாக அமர்ந்து கொண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதைத்தான் பொறுக்கமுடியவில்லை.
 
மனதாலே ஒரு பெண்ணை தவறாக நினைத்தாலே அவன் மனதால் விபச்சாரம் செய்கிறான் என்று ஏசுநாதர் கூறி இருக்கிறாராம். இதன் அடிப்படையில் “நீங்கள் அத்தனைப் பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது என்னையும் சேர்த்து.
 
 
-இரா.சரவணதீர்த்தா
 
நன்றி வல்லினம்

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்