பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 14, 2014

வி-10

 வி-10
 
 
 
 
இதனை தட்டச்சு செய்துக் கொண்டிருக்கும் சமயம்.
என்னுடைய கைவிரலில் இருந்து வழிந்துக் கோண்டிருக்கும் ரத்தத்தினை துடைக்க மனமில்லை.
அதற்கான அவசியமும் இனி இருப்பதாக தெரியவில்லை. கணினிக்கு ஏதும் ஆகிடுமோ என்ற பயமில்லாமல்
எழுத்துகளை தட்டுகிறேன். இவ்வளவு வேகமாக தட்டச்சு செய்ததில்லை. சொல்லவேண்டியது மிக
முக்கியம் அவசியமும் கூட.
 
    அருகில் ஆழ்ந்து உறங்கிகொண்டிருக்கிறாள் மனைவி.
பெட்டியில் இருந்து அவளை இனி எழுப்ப இயலாது. நானும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் பேச்சு
மூச்சற்று போகலாம். இரண்டு பெட்டிகளில் எனக்கான பெட்டியை நான் தான் பூர்த்தி செய்யவேண்டும்.
அதற்கு உங்களுக்கு சிலவற்றை சொல்லியாக வேண்டும். விபத்து எத்தகையானதாக இருந்தாலும்
அதன் பாதிப்பு சம்பத்தப்பட்டவருக்கு வார்த்தைகளில் சிக்காத ஒன்றாக இருந்துவிடுகிறது.
 
   அதனால்தான் என்னவோ விபத்துகள் குறித்த பிரக்ஞையின்றி
வாகனங்களில் செல்கிறார்கள். என்னால் பார்க்கவியலாத அளவுக்கு முகத்திலும் கழுத்திலும்
ரத்த ஒழுகளுடன் இருக்கிறாள் மனைவி. மிகவும் பிரகாசமான முகம் கொண்டிடுந்தவள் அவள். அவளில்
குரலின் இனிமை அத்தனை சுகமானது.
 
   எங்களின் காதல் கதைகள் முழுக்கவும் அவளது முக பிரகாசமாகவும்
, இனிமை குரலாகவும்தான் சூழ்ந்திருக்கிறது. கோவத்தில் கூட அவளின் குரல் ஒலி எனக்கு
காதலையே வளர்த்தது. வழக்கம் பொலவேதான் வீட்டில் சம்மதிக்க மறுத்து சண்டையிட்டு நாங்கள்
கைக்கோர்த்தோம்.
 
   எங்களின் இல்லற வாழ்க்கை தனிக்குடித்தனமாக இருந்தாலும்,
எப்போதும் வீட்டில் மகிழ்ச்சி, வீட்டு இருப்பை அழுத்தமாக்கிகொண்டே இருந்தது. தொலைக்காட்சி
இல்லாததால் எங்களில் இருவரின் முகங்களே வீடு முழுக்க நிறைந்திருந்தன. வானொலி இல்லாததால்
எங்களின் குரல் மட்டுமே வீட்டில் மூளை முடுக்கலில் எல்லாம் தங்கியிருந்தன.
 
   இரவுகளில் நாங்கள் எங்களுக்குள் கிச்சி கிச்சி
மூட்டிக்கொண்டு வித்தியாசமாக சிரித்து ஒருவரை ஒருவர் பயம்காட்டுவோம். இருவரில் யார்
முதலில் பயப்படுகிறார்கள் என்பதே போட்டி. இருவரில் யார் முதலில் பயந்தாலும் இருவருக்கும்தான்
குதூகலாக அன்றைய பொழுது விடியும். இப்படி நாங்கள் ஒருவரை ஒருவர் பயமூட்டி சிரித்து
கொண்டாலும் எங்களை பயமூட்டும் ஒன்றும் அவ்வபோது வீட்டிற்கு வந்து போகும். சிலந்தி.
 
    சிலந்திகளுக்கு
எங்கள் மேல் என்ன கோவமென்று தெரியாது. பல முறை எங்களை கடிக்க வந்திருக்கின்றன. பல வடிவங்களில்
வந்திருக்கின்றன. சிலந்திகளுக்கு பயந்தே வீட்டில் அங்குமிங்கும் மருந்துகளை வைத்திருக்கிறோம்.
எங்களின் பாக்கெட்டிலும் சிலத்திக் கொல்லி மருந்து எப்போதும் இருக்கும். கரப்பான் பூச்சிகளால்
எங்களுக்கு ஒரு போதும் தொல்லை இருந்ததில்லை. செத்த சிலந்திகளை தின்பது இந்த கரப்பான்
பூச்சிகள்தான். என் மனைவி சொல்வதை கரப்பான் பூச்சி கெட்கிறதோ என்று கூட எனக்கு சந்தேகம்
ஏற்படும். அது அவ்வளவு பெரிய அதிசயம் இல்லாததால் அதுபற்றி இதுவரை கேட்டதில்லை. கேட்டிருக்கலாம்.
 
 வெலைக்கு சென்ற பின்னும் நாங்கள் குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு
ஒரு முறையாவது குறுஞ்செய்தி அனுப்பிக் கொள்வோம். பேசிக்கொள்வோம். இன்னும் சொல்லப்போனால்,
அலுவலகத்தில் இருக்கும் அழகானவர்கள் குறித்தும் சிலாகித்துக் கொள்வோம்.
 
    பெண்களின் குறித்து நான் பேசும் ஒவ்வொரு முறையும்
ஆண்களைக் குறித்து அவள் பேசுவாள். நிஜத்தில் நாங்கள் இருவருமே பொய் சொல்கிறோம் என்பது
எங்களுக்கு தெரியும். இருந்தும் அப்படியாக ஒரு விளையாட்டும் எங்களிடம் உண்டு. ஏனெனில்
அலுவலகத்தில் சகஜத்தில் நாங்கள் யாருடனும் பழுகுவதில்லை. மூன்றாம் தரப்பினர் யாரும்
எங்களுக்கு ஊடலை ஏற்படுத்துவதை நாங்கள் விரும்புவதில்லை. அலுவலகம் என்பது வேலை செய்யவே.
அதற்கு மட்டுமே அங்கு செல்வோம். இருவருக்கும் இதில் ஒரே சிந்தனை இருப்பது இன்னும் மகிழ்ச்சிதான்.
இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். ஒன்றை தவிர.
 
    எல்லாம் சரியாக இருந்தால் அதில் என்னவிருக்கிறது
சுவாரஸ்யம் என்று எவன் சொன்னானோ தெரியவில்லை. எங்களில் இருந்த ஒரே முரன் அந்த ஒன்றுதான்.
இந்த விபத்துக்கும் அதுதான் காரணமாக அமைந்து விட்டிடுந்தது.
 
   இரவு. எத்தனை நட்ச்சத்திரங்களை காட்டிக்கொடுக்கிறது.
எத்தனை அழகை அடக்கி வைத்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியாது. ஏனோ எனக்கு அது
தெரிந்திருக்கிறது.
 
   இருள் மட்டும்தானே இவ்வுலகில் நிரந்தரமான ஒன்று.
வந்து போகும் சூரியனில் ஒளி குறித்தெல்லாம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. காலையில்
வருகிறது மாலையில் மறைகிறது. அவ்வளவுதான். என்னமோ வெளிச்சம் தருகிறது. உயிர்கள் வாழ
சூரிய வெளிச்சம் தருகிறது என்பதெல்லாம் விஞ்ஞானிகளின் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கவேண்டும்.
அதைவிடுங்கள் நாம் பேச வேண்டியது இரவை குறித்து, இரவின் அழகை அழிக்கும் சூரிய ஒளியைக்
குறித்தல்ல.
 
   இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதுதுதான் முதன்
முதலாக எனக்கும் எனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு உருவானது. மறுநாள் நண்பரின் திருமணத்திற்கு
செல்லவேண்டும். இரவில் பயணிக்கலாம் என்று இரவை குறித்து பேச்செடுத்த சமயம்தான் எனக்கே
அவளுக்கு இரவின் மீது இருந்த ஏதோ பயம் பிடிபட்டது.
 
   பகலில் வெயிலில் வெறுப்பு இருந்தாலும் காரணம்  சொல்லலாம். 
இதத்தை கூட்டும் இரவில் ஏற்பட்ட வெறுப்பின் காரணம் அவளுக்கு சொல்ல தெரியவில்லை.
அதனை தொடர்ந்து ஏதோ இருக்கிறது என்ற எண்ணமே எனக்கு ஏற்பட்டது. இவள் எதையாவது மறைக்கிறாளோ
என்று என் ஆள்மனதில் ஒரு குரல் கேட்டது.
 
  சட்டென திருமணத்திற்கு முந்திய எந்த நாளிலும் நாங்கள்
இரவுகளில் சந்தித்ததில்லை என்பது பிடிபட்டது. ஏன் இதுவரை எனக்கு அது குறித்து தெரிந்திருக்கவில்லை
எனற குழப்பம் என்னை கோவப்படுத்தியது. இன்னமும் ஆழமாக பழைய நினைவுகளில் மூழ்க முயன்றேன்
. நனைந்தேனே தவிர நினைவுக்கு எதுவும் வரவில்லை.
 
   அவளுக்கு பேய்கள் என்றால் பயமாக இருக்கலாம் என்று
என்னை நானே சமாதானம் செய்துக் கொண்டேன். எனக்கு நானே பேசிக்கொண்டேன். ஆனால் அது என்
குரல் அல்ல என்பது அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் அது சொல்வதை நான் கேட்டேன். அந்த
குரல் வழக்கமான எனது ஆழ்மனதில் இருந்துதான் வந்தது.
 
   என் நினைவுகளை ஏமாற்றி ஏதோ ஒன்று எனக்குள் புகுந்திருப்பதை
உணர்ந்த நொடி. வேர்வை என் கால் வேர் வாரை மொட்டுவிட தொடங்கியது. வெளியேரு என சொல்வதாய்
இருந்தாலும் யார் அது என தெரிய வேண்டுமே. ஊர் பேர் தெரியாதவரை எப்படி விரட்டுவது எப்படி
போரிடுவது. இதென்ன பேஸ்புக்கா ஊர் பேர் தெரியாதவர்களோடு சும்மாவேணும் சண்டையிட்டு கூத்தடிப்பதற்கு.
 
   இத்தனை குழப்பத்திற்கு மத்தியிலும் என்னை பார்த்து
சிரித்துக் கொண்டிருக்கும் மனைவிக்கு என்னமோ தெரிந்திருக்கிறது. அவளின் சிரிப்புக்கு
நானும் கூட சிரித்தேன். பெரிய வித்தியாசம் இல்லாத சிரிப்பு அது. ஒரே மாதிரியான ஒலி,
ஒரே மாதிரியான பற்கள், ஒரே மாதிரியான தொனி.
 
   பல கேள்விகளுடன்தான் பயணிக்கலானோம். என்னுடைய கணிப்புப்படி
மதியம் கிளம்பி இரவு வரை நெருங்கிக் கொண்டிருந்தது பயணம்.
 
   சாலை கொஞ்சம் கொஞ்சமாக இருளால் சூழத்தொடங்கியது.
மனைவியின் கண்களில் இருந்த வசீகரம் பீதியாக தன்னை மாற்றியிருந்தது.
 
    நண்பனின் வீட்டுக்கு செல்ல வேண்டிய பயணத்தில்தான்
விபத்தும் அதையடுத்து விபரீதமும் ஏற்பட்டது. மனைவியின் பேச்சில் இருந்திருந்த காரணத்தையும்
பயத்தையும் புரிந்துக் கொள்ள இத்தனை தாமதமாகியிருக்கவேண்டாம்.    
 
   இவ்விபத்துக்கு பிறரை காரணம் காட்டுவதைவிட நாங்களேதான்
முதன்மையான காரணமாக இருக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
 
   சாலையில் உடன் வந்துக் கொண்டிருந்த இதர வாகனங்கள்
கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. இப்போது இருள் சூழ ஒற்றைவழி நெடுஞ்சாலையில் நாங்கள் மட்டுமே
பயணித்துக் கொண்டிருந்தோம்.
 
   இந்த வழியை பயன்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும்  வழியில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாததை
நண்பன் முன்னமே சொல்லியிருந்தான். ஜீ.பி.எஸ் போன்ற பாதை காட்டி துணையில்லாமல் போய்க்கொண்டிருந்தேன்.
 
   தூரப்பயணம் வருகிறதென்றால் காரை ஒரு முறை பரிசோதனை
செய்துக் கொள்வது எனது பழக்கம். இந்த முறை என்னமோ கோளாரால் கார் வேகமெடுத்தால் குதித்து
குதித்து செல்வது போல தோன்றியது. குதிக்கிறதா என கவனமெடுத்து கூர்ந்தால் அப்படியொன்றும்
இல்லை.  இல்லையென்பதை உறுதி செய்த்த பிறகு கார்
குதித்த குதியில் என் தலை மேலே முட்டிவிட்டு வந்தது. மனைவியின் கண்கள் கொஞ்சமும் அசராமல்
இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
 
    அவளின் கண்கள் தூரத்தில் எதையோ கண்டுவிட்டதை அவளின்
செயல்களில் இருந்து தெரிந்துக் கொண்டேன். உண்மையில் எனக்கு முன்னதாகவே அவள் கவனித்திருப்பது
குறித்த கேள்விகள் இல்லை.
 
   குழந்தையோடு ஒருத்தி நின்றுக் கொண்டிருந்தாள்.
 
   பல கதைகளில் இப்படி பேய்கள்தான் பெண்களாகவும் குழந்தையாகவும்
வந்து நிற்பதாக படித்தும் கேட்டும் இருக்கிறோம். இப்படியான பேய்கள் எல்லாம் இப்போதும்
இருக்குமோ என்ற பயத்தில்  எனக்கும் பீதியானது.
மனைவியும் நானும் ஒருவரை ஒரு பார்த்துக்கொண்டோம். கார் நேராக அந்த பெண்ணுக்கு அருகிள்
நின்றது.
 
   கார் இப்போது வேகமாக சென்றுக் கொண்டிருந்தது.
 
நானும் மனைவியும்
பேச்சு மூச்சற்று முன் இரு இருக்கையில் இருந்தோம். பின்னால் கைக்குழந்தையுடன் அந்த
பெண். அவள் கார் கண்ணாடியையே வெறுத்துக் கொண்டிருந்தாள். அவள் குழந்தையிடமிருந்து எந்த
அசைவும் இன்னமும் வரவில்லை. அது குழந்தைதானா. கையில் கொண்டிருக்கும் அந்த பெண்ணும்
பெண்தானா.
 
   சாலையின் இருள்கள் காரினை நிறைத்துக்கொண்டிருந்தது.
காருக்குள் சூன்யம் சூழ்ந்துவிட்டதாய்ப்பட்டது. சுழ்ச்சியில் சுழலில் சுற்றிகொண்டதாக
படபடத்தது.
 
    காரின் சத்தம் மட்டுமே இப்போது காதுகளை அடைத்தது.
அடைப்பு கொஞ்சம் கொஞ்சமாக விளகிக்கொண்டிருக்கிறது. அடையாளம் காட்டாத இரைச்சலில் நாங்கள்
ஆட்பட்டோம்.
 
   குழந்தையின் அழுகுரல் எங்களை சுய பிரக்ஞைக்கு கொண்டுவந்தது.
குழந்தை அவளின் கைகளில் அசைந்தது. குழந்தைகளுக்கே உரிய அசைவாக இருக்கவில்லை. நெழிந்தது.
அந்த பெண் இன்னமும் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியையேதான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
 
   அடுத்ததாய் நடந்துவிட்டதை நாங்கள் கனவிலும் கண்டிருக்கவில்லை.
அந்த பெண்ணின் கண்களில் இருந்து வந்த ரத்தம் வளைந்து மூக்கினுள் போனது. அவளின் பற்கள்
தெரிய  எங்களை நோக்கி வாயை திறந்தாள். தொண்டைக்குழி
பாதாளம் போல நீண்டிருந்தது. ஒட்டடைகள் காற்றில் அசைய எக்கச்சகமான சிலந்திகள்  அங்குமிங்கும் ஓடின. அவளின் கண்களின் தெரிந்த பசி
எங்களின் வயிற்றில் அமிலத்தை ஊற்றியதாய் செய்தது. கையிலிருந்த குழந்தையை பாதள வாய்க்கும்
கொஞ்சம் கொஞ்சமாக நுழைத்தாள்.
 
   அடுத்ததாக அவளது பாதாள வாய்க்கும் நாங்கள் இருவரும்தான்
செல்லப்போவது உறுதியானது. விபத்து அப்போதுதான் நடந்தது.
 
  காரின் முன்னே கவனிக்காமல் நான் என் மனைவியை பார்க்க
அவளும் சொல்லி வைத்தார் போல என்னை பார்த்தாள். இருவரும் ஒரே மாதிரி சிரித்தோம். ஒரே
மாதிரியான ஒலி வந்தது.
 
   இருவரும் சத்தமாக சிரிக்கத்தொடங்கினோம். சட்டென
இருவரும் பின்னால் பாய்ந்தோம். எப்படித்தான் இருவரின் உடலும் பின்னால் போனதோ தெரியவில்லை.
பயங்கர அலறல் சத்தம்.
 
  கார் இன்னமும் நேராக சென்றுக் கொண்டிருந்தது. முன்
இரு இருக்கைகளும் காலியாக இருக்க நானும் மனைவியும் பின்னால் அந்த பெண்ணை கடித்து தின்றுக்
கொண்டிருந்தோம். கார் முழுக்க சிலந்திகள் கதறிக் கொண்டு ஓடின. வழக்கம் போல கரப்பான்
பூச்சிகள் வழக்கத்திற்கு மாறாக ஓடிக்கொண்டிருக்கும் சிலந்திகளை பிடித்து தின்றுக்கொண்டிருக்கின்றன.
 
    விடியப்போகிறது நானும் பெட்டிக்குள் செல்லவேண்டும்.
இரவு வந்ததும் வாருங்கள் இன்னும் சொல்லவேண்டியவை உள்ளன.
 
    பெட்டிக்குள்ளே போனேன். என்மேல் கரப்பான் பூச்சிகள்
போர்வைபோல போர்த்திக் கொண்டிருந்தன. பக்கத்து பெட்டியில் உள்ளது போலவே என் முகத்தையும்
விட்டுவிட்டு உடல் முழுவதும் கரப்பான்கள் நிறைந்து வழிந்தன. சட்டென மூடி தானாக வந்து
மூடியது. சூரியன் வருவதற்கு முன்பாக வீடு இடிந்து மண்ணுக்குள் போனது.
 
    இரவில் வீடு மீண்டும் முளைக்கும். பசிக்கும்.  நாங்கள் வருவோம். .
 
   
 -தயாஜி-
நன்றி மலைகள்.காம்
2014

இன்னும் சில கொலைகள்

இன்னும் சில கொலைகள்
 

 
 
முட்டி வலிக்க படியேறிதான் செல்ல வேண்டும். அதிலும் ஐந்தாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கு செல்வதற்குள் நாக்கு தள்ளிவிடும். வழக்கமாக செல்கிறவர்கள் முன்னெச்சரிக்கையாக ஐத்தாவது மாடியில் அடி வைக்கும் போதே மூக்கினை மூடிக்கொள்வார்கள். அடுத்தடுத்த படிகளில் அவசரம் தெரியும். ஆறாவது மாடியை அடைந்ததும் மூச்சினை உள்ளிழுத்து முக்கிகொண்டு முன்னே நடந்து கதவை அடைவார்கள். எப்படியும் அங்கிருக்கும் வாந்தி காய்ந்து போயிருந்தாலும் கவுச்சி வாடை இருக்கவே செய்யும். இது போதாதென்று மூத்திர வாடை வெறு. புதிதாக படியேறுகிறவர்களின் சின்ன அஜாக்கிரதையும் மூச்சடைக்க செய்துவிடும். எதுதான் அங்கு மூந்திரமடிக்க வைக்கிறதென்று கண்டுபிடிக்க முயன்றார்கள்.
வாந்தியும் தொந்தரவுதானே , மூத்திரத்தின் காரணம் மட்டும் அவ்வளவு அவசியமா அவர்களுக்கு என்றால் அதுதான் இல்லை. வாந்தியெடுக்கும் அளவுக்கு சிறுவர்கள் குடித்து போதையுடன் படியேறமாட்டார்கள். அப்படித்தான் அவர்கள் நம்புகிறார்கள். எதையெதையோ நம்பியவர்களுக்கு இதுவொன்னும் ஒவ்வாமையல்ல. அதே போல, சிறுநீர் கழிக்குமளவுக்கு சில சேட்டை சிறுவர்கள் இருப்பதாகவும் நம்பினார்கள். குடிகாரன்களுடன் மோதுவதைவிட குட்டி பையன்களுடன் மோதுவது பாதுகாப்பானது. எந்த ஆதாரமும் இன்றிதான் இவர்கள் நம்பிக்கையோடு காரணங்களை தேட தயாரானார்கள்.
அன்றுதான் கூட்டம் கூடியது. வந்திருந்த கூட்டத்திற்கு ஏற்றார்போல பின்னர் கூடாரங்கள் அளந்து பூட்டப்பட்டன. பார்ப்பதற்கு கூடாரம் நிறைய கூட்டமாக இருந்தது. இருப்பதாக அப்படி தெரிந்தது. கூடாரத்தை வாடகைக்கு கொடுக்கின்றவர்களே சில வசதிகளையும் செய்திருந்தார்கள். உன்னதமானதாக கருதப்பட்டது அவர்களே கூட்டிவரும் இருபது பேர் கொண்ட குழு. கூட்டத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும். யார் மண்டை ஒடிந்தாலும். கூடாரத்துக்கோ அங்கிருக்கும் துணிகளுக்கோ எதும் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்வார்கள். தேவையென்றால் இவர்களே கூட அசம்பாவிதத்தை ஏற்பாடு செய்வார்கள். அதுவொன்றும் பெரிய வேலை இல்லைதான். சுலபமானதுதான். ஆனால் அதற்கேற்ற நேரம் தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான ஆளை பார்த்து கெட்ட வார்த்தையில் கேட்க வேண்டும். அல்லது சரியான நேரத்தில் சரியான ஆள் மீது எதையாவது வீச வேண்டும். அவ்வளவுதான். கொஞ்சம் பிசகினாலும் நம்மை பிதுக்கிவிடுவார்கள். எச்சரிக்கை என்பதைவிட சரியான நேரம் பார்த்திருக்க வேண்டும். அதற்காக காத்திருக்கவும் வேண்டும்.
அன்றைய கூட்டத்திற்கும் அசம்பாவிதத்திற்கும் தொடர்பில்லாதமையால் வந்திருந்திருந்தவர்களின் அக்கரை அவர்களின் கூடாரம் , நாற்காலி மேஜை துணிகள் மீதுதான் இருந்தது.
மூத்திரக்காரணத்தை கண்டறிய அங்கு வசிப்பவர்கள் கூடாரத்தின் கீழ் கூடியிருந்தார்கள். அடுக்குமாடி வீடுகள் எல்லாம் காலியாக இருக்குமென நினைத்தால் ஏமாற்றம்தான். ஒரு வீட்டில் மட்டும் ஏதோ சத்தம் கேட்டது. மூன்று அறை கொண்ட வீடு. நடுத்தர படுக்கையறை ஒன்று. அதைவிட சின்ன படுக்கை அறை ஒன்று. நடுத்தரமும் இல்லாமல் சின்னதாகவும் இல்லாமல் குட்டியாக மூன்றாவது அறை. வழக்கமாக மூன்றாவது அறைதான் சாமிக்கென ஒதுக்கியிருப்பார்கள். அதிலும் பாதியாக்கி ஸ்டோர் சாமான்களை வைத்திருப்பார்கள்.
முதல் அறையில் காத்தாடியை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி . ஒல்லியானவளாக இருந்தாலும் அவள் நின்றுக்கொண்டிருக்கும் நாற்காலி அவளை பயமூட்டியது. எந்த நேரத்திலும் உடையலாம் என்ற நாற்காலிதான் என்றாலும் உடைபடுவதற்கு நாளாகும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துக் கொண்டிருந்தது. துடைத்து முடித்தவள். தன் தோளில் போட்டு வைத்திருந்த துப்பட்டாவை எடுத்து உதறினாள். நல்ல மொத்தமான துப்பட்டா. ஒரு வீசுதலில் துப்பட்டா காத்தாடிக்கு இந்த பக்கம் நுழைந்து அந்த பக்கம் வந்து தேவியின் கைக்கு கிடைத்தது. நன்றாக சுருக்கிட்டாள். ஒரு முறை இழுத்து பார்த்தாள். துப்பட்டாவும் தாங்கியது காத்தாடியும் தாங்கியது. அவள்தான் தாங்காது இருமினாள்.
இது அவளது கடைசி இருமலாக இருக்கட்டும் என நினைத்துக் கொண்டாள். மீண்டும் இருமல் வந்தது. இந்த சனியன் எப்போது தொலையும் என தன்னைத்தானே திட்டிக்கொண்டாள்.
வெளியில் இருந்து குரல் கேட்டது. கழுத்தில் மாட்ட வேண்டிய கயிறு அப்படியே கையில் நின்றது. உன்னிப்பாக என்ன பேசுகிறார்கள் என கேட்டாள். ஒலிபெருக்கியின் சத்தம் ஒய்..ஒய்யில் தொடங்கி ஒழுங்காய் கேட்டது.
இனி தினமும் ஆறாவது மாடிக்கு ஒருவர் காவலிருக்க வேண்டும் என ஒருவர் சொல்ல மற்றவர்கள் அதனை ஆதரித்தார்கள். வெளியில் இருந்து ஆட்கள் வந்தால் செலவாகும் என்பதால், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு நாளுக்கு ஒருவர் அங்கு காவலிருக்கவேண்டும் என்றார். சின்ன சலசலப்பு. யார் முதலில் நிற்கவேண்டும் என ஆளுக்கு ஆள் ஒரு கருத்தினை சொன்னார்கள்.
ஆறாவது மாடி காவலுக்கு முதல் மாடியில் இருந்து காவலுக்கு ஆள் போவதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதில் நியாயம் இருப்பதாக தெரிந்ததும் ஆறாவது மாடியில் தங்கியிருப்பவர்கள் மட்டும் அங்கு காவலுக்கு இருக்க வேண்டும் என முடிவெடுத்து ஓரளவுக்கு சம்மதம் வாங்கினார்கள். ஆறாவது மாடியில் மொத்தம் பத்து வீடுகள் . ஒவ்வொருவரும் சம்மதம் தெரிவித்து கையொப்பமிட தொடங்கினார்கள். மொத்தம் ஒன்பது பேரே இருந்தார்கள். பத்தாவது வீட்டுல் இருக்கும் ஆள் இல்லாததை அப்போதுதான் கவனித்தார்கள். வராதவள் பெயர் தேவி. இருமல் வியாதிக்காரி. அவளை வெளியில் அதிகம் பார்க்க முடியாது. அவள் கணவன் தான் அடிக்கடி வெளியில் தென்படுவான். அவனும் எங்கே என்ன வேலையென்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. மாடி பால்கனியில் அவனை பார்ப்பதோடு சரி கீழே வருவது எப்போதாவது ஐஸ்காரன் மணி அடித்துக் கொண்டே வரும்போதுதான். குதித்து குதித்து வந்து ஐஸ் வாங்கி குதித்து குதித்தே மாடிக்கு போவான். அவனக்கு ஒருகால் வளர்ச்சியின்றி இருப்பது ஐஸ்காரருக்கும் அந்த நேரம் ஐஸ் வாங்க வந்திருப்பவர்களுக்குத்தான் தெரியும்.
வேறெந்த விபரமும் கூடார கூட்டத்திற்கு தெரியவில்லை. ஆழமாக யோசிக்க ஆரம்பித்தார்கள். அவள் பெயர் தேவியா இல்லை ஸ்ரீதேவியா என கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விதான் அவர்களின் யோசனைக்கு காரணம்.
யாரையாவது அனுப்பி ஆறாவது மாடியில் யார் இருந்தாலும் கூட்டிவரும்படி மீண்டும் ஆள் அனுப்ப யோசனையில் ஆழ்ந்தார்கள். சிற்றுண்டியும் வந்தது. நிதானமாக சாப்பிட்டு பிறகு யார் போகலாம் என பேசி முடிவெடுக்கலாம் என கூட்ட தலைவர் சொல்லவும். ஒருசேர ஆமாம் போட்டனர் அங்கத்தினர். சிற்றுண்டியை கொண்டு வந்தவர்கள் என்ன காரணமோ தெரியவில்லை. கரண்டியை எடுத்து வர மறந்துவிட்டார்கள்.
அதற்கான மேஜையில் அடுக்கியிருந்த பலகாரங்களை கையில் எடுப்பது கூட்டத்தினர்க்கு அநாகரீகமாக இருந்தது. வைத்திருப்பது வடைதான் என்றாலும் கையில் எடுப்பதென்பது அவ்வளவு சரியில்லைதான். கரண்டிக்காக ஒரு சலசலப்பு ஏற்பட ஒரு சம்பவம் நடந்தது.
தலைவர்தான் எப்போதும் முதலில் சாப்பிடவேண்டும் என்பது அவர்களே எழுதி வைத்துக்கொண்ட சட்டம். அது வடையானாலும் வருமானமானாலும். கூட்டத்திலிருந்து தன்னுடைய குட்டி கூட்டத்துடன் சாப்பாட்டு மேஜைக்கு சென்ற தலைவர் எதார்த்தமாக வடையில் கை வைக்க உடன் இருந்தவர்கள் பதறினார்கள். தலைவர் என்ற தகுதிக்கு இப்படி வடைகளையெல்லாம் கையில் எடுப்பது ஒவ்வாது என்றார்கள். அதோடு தலைவருக்கான தகுதிகள் என்னவென்று வடையில் இருந்து தொடங்கினார்கள். குட்டி கூட்டம் தலைவரிடம் ஏதேதோ பேச பெரிய கூட்டம் ஏதும் புரியாமல் தங்களுக்கான சிற்றுண்டி என்னவென்றே தெரியாமல் தேவியா ஸ்ரீதேவியா என இன்னமும் யோசித்துக் கொண்ட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு வராதவள் தேவியாக இருந்தால் என்ன, அவள் ஸ்ரீதேவியாக இருந்தால் என்னவென்று காத்துவாக்கில் காதில் விழுந்தது. அந்த முடிவுதான் இந்த கூட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுமென அவர்களுக்குள்ளேயே பேசி சமாதானம் ஆனார்கள்.
தன்னை சூழ்ந்துள்ள குட்டி கூட்டத்தின் இந்த ஆலோசனைகளை கேட்டுக் கோண்டிருந்த தலைவருக்கு சட்டென மூளையில் பொறி கிளம்பியது. இப்படியே போனால் அடுத்த தலைவராய் தன் மகன் ஆக முடியாது என புரிந்தது. தன் தலைமைத்துவத்தில் எல்லாமே சரியாக நடக்கிறது என்பதையும் தான் ஒரு அரசியல் சானக்கியன் என்பதை எடுத்துக் காட்ட முனைந்தார். சிற்றுண்டியை கொண்டு வந்தவர்களிடம் எங்கே உங்க முதலாளி என்றார். தோ வந்திடுவாரு என்று கூறிய எலும்புத்தோல் போர்த்தியவனை பார்வையால் மிரட்டத்தொடங்கினார்.
வடைக்காக கொடுத்த பணமெல்லாம் வீண் என்றும், ஒரு கரண்டியை கூட ஒழுங்காக கொண்டு வராதவர்களை நம்பி அடுத்தடுத்த வியாபார ஆதரவை கொடுப்பது எப்படியென்றும் மைக் இல்லாமலேயே விலாசினார். அதுவரை ஏதேதோ பேசிய அனைவரும் தலைவர் கோவப்பட்டதால் அவரின் போராட்ட குணம் குறித்து பேச ஆரம்பித்தார்கள். கோவத்திற்கும் போரட்ட குணத்திற்கும் அப்படியொரு ஒற்றுமையென யாரும் பாலவயதில் அவர்களுக்கு பாடம் நடத்தியிருக்கலாம்.
வெள்ளை சட்டை வெள்ளை வேட்டை வெள்ளை ஜட்டி போட்டிருந்தவர் சொன்ன கதை தலைவரின் போராட்ட குணத்தை மேலும் மெருகூட்டியது.
இப்படித்தான் ஒரு முறை, தலைவரின் மனைவி தன்னிடமிருந்த பழைய புடவையொன்றை வேலைக்காரிப்பெண்ணுக்கு கொடுத்திருக்கிறாள். அவளும் மறுநாளே அதனை அணிந்து வேலைக்கு வந்திருக்கிறாள். முதல் நாள் அதிக நேரம் தொண்டர்களுடன் சமூக வளர்ச்சி குறித்து பேசிய போதையில் தாமதமாகவே படுக்கையை விட்டு எழுந்திருக்கிறார். கண் மங்கலாக தெரிந்தது. எதிரே இருக்கும் கண்ணாடி அலமாரியை மனைவி துடைத்துக் கொண்டிருக்கிறாள். தலைவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சட்டென மனைவியை பின்னால் இருந்து கட்டியணைத்துவிட்டார். ஒரே அலறல் சத்தம். வெளியில் இருந்து சத்தம் கேட்டு ஓடி வந்திருக்கிறாள் வேலைக்காரி. பாருங்களேன் காலையில் கண்கள் தெளிவில்லாத நேரம் கூட வேலைக்காரி இருந்தும் தலைவர் தன் மனைவியைத்தான் கட்டியணைத்திருக்கிறார். இதே வேறொருவராக இருந்திருந்தால், மனைவியின் ஆடையை வேலைக்காரி அணிந்திருந்ததை காரணம் காட்டி தெரியாதது போல வேலைக்காரியை கட்டிப்பிடுத்து மன்னிப்பு கேட்பார்கள். தலைவரின் போராட்டத்திற்கு இதுவல்லவோ சான்று என முடிக்கவும். இன்னொருவர் சொன்ன கதையும் காதில் விழுந்தது. அது அந்த நேரம் நடந்திருக்க வேண்டிய கதை. ஆனால் யாரும் அந்த கதைக்கு காது கொடுக்கவில்லை. அவனும் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி வெள்ளை ஜட்டி போட்டிருந்தால் அவனது கதையும் கேட்கப்பட்டிருக்கும். அவன் கொஞ்சம் கிறுக்கு போல வேறு வண்ணத்தில் குறிப்பாக தலைவரின் கட்சிக்கொடியில் இல்லாத வண்ணத்தில் பேனாவை சட்டைப்பையில் வைத்திருந்தான். ஒருவேளை இவன் எத்ரிகட்சி ஆளாக இருக்கலாம் எனவும் ஒரு பேச்சு அடிப்பட்டது. அந்த கலகக்காரனின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தி தலைவரை மாசு படுத்தும் என முன்னெச்சரிக்கையாக இருந்தார்கள்.
அந்த நேரம்தான் சிற்றுண்டி கொண்டு வந்தவரின் முதலாளி வந்து சேர்ந்தார். கரண்டி இல்லாததை கண்டு தலைவர் பேசிக்கொண்டிருப்பதை கவனித்து தன்னுடைய வேலையாளின் கவனக்குறைவை அவரும் கண்டித்து. அடுத்தடுத்த வாய்ப்புகள் தடைபடாமல் கிடைத்திட இம்முறை கட்டணம் வேண்டாம் எனவும் இலவசமாக நிகழ்ச்சிக்கு கொடுத்ததாக இருக்கட்டுமெனவும் பேசி தலைவரை சமாதானம் செய்தார்.
இப்படி உடனே சமாதானம் ஆவாரா தலைவர். முதலாளி தன் பையில் இருந்து காசு வாங்கிய ரிசிட்டையும் கொடுத்த காசையும் திரும்ப கொடுக்கவும். கையால் சாப்பிடும் தமிழ் பாரம்பரியத்தை குறித்து பேச ஆரம்பித்தார்.
தலைவர் பேசி முடித்ததும் முதல் வடையை தான் சாப்பிடாமல் சிற்றுண்டி வேலையாளுக்கு கொடுத்து. உழைப்பவர்கள் வயிறுதான் முதலில் நிறையவேண்டும் என்று மேலும் அரைமணிநேரம் பேசினார். தொடங்கிய பேச்சினை தொடர்ந்து மதிய நேர சாப்பாடும் வந்தது.
கூட்டம் முடிய தாமதமாகும் என தெரிந்தே காலை சிற்றுண்டியை ஒரு இடத்திலும் மதிய உணவை இன்னொரு இடத்திலும் சொல்லி வைத்த தலைவரின் புத்தி சாதூர்யம் குறித்து கூட்டம் பேச ஆரம்பித்தது. வடைகள் அப்படியே மிச்சமிருக்க தலைவரின் அழைப்புக்கு இணங்கி சிறு கூட்டமும் பெரு கூட்டமும் வந்திருந்த சாப்பாடுக்கு வரிசையாய் நின்றது.
சாப்பாட்டுக்காக மேஜை போடப்பட்டிருந்தது. வெள்ளைத்துணியால் மேஜை மூடப்பட்டது. தலைவர் ஒரு முறை திரும்ப பார்த்தார். அவர் ஆசைப்பட்டது போலவே அவருக்கு பின்னால் வரிசையாய் நின்றிருந்தார்கள். கட்டுக்கோப்பாக வழிநடத்தப்படுவதை நினைத்து தலைவரின் புருவம் தானாக ஒரு முறை ஏறி இறங்கியது.
சாப்பாட்டில் ஆவி பறக்கிறது. வாசனையும் அவ்வளவு ரம்மியமாக இருந்தது. சாப்பாடு பறிமாறவேண்டியவரும் பளிச்சென்ற வெள்ளையில் வந்திருந்தார்கள். ஒரு சாப்பாட்டுக்கு ஒரு ஆள் இரண்டு கைகளிலும் கரண்டிகள். முகம் முழுக்க பல்லாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். தலையில் தொப்பியை சொல்லியே ஆகவேண்டும். பார்ப்பதற்கு மெடுக்கான தோற்றத்தைக் கொடுத்தார்கள். தலைவர்தானே முதலில் சாப்பிட வேண்டும். முன் வரிசை வேறு. வேறு காரணத்திற்காகவும் தலைவர் திரும்பி வருசையை பார்த்தார். வயதான அல்லது ஒல்லி பில்லியான யாரும் இருந்தால், அவர்களை முதலாவதாக சாப்பிட வைத்து மேலும் தன்னை உயர்த்திக்கொள்ளலாம். ஆனால், அதைவிட முக்கியமாக , தலைவரின் உயர்வைவிட முக்கியமாக அவரின் தொப்பைக்கு இப்போது பசிக்கிறது. ஆகவே தானே முதலில் சாப்பிட முடிவை வழக்கம் போலவே தனது முதாதையர் பாணியில் பின் பற்றினார்.
தலைவருக்கு பறிமாறும் பாக்கியம் பெற்றவரின் முகத்தில்தான் எத்தனை பூரிப்பு புல்லரிப்பு. தலைவரின் தட்டு நிறைந்துக் கொண்டிருக்கும் சமயம் சட்டென அடுக்குமாடி ஆறாவது வீட்டில் இருந்து ஏதோ உடைந்தது. பெரிதாகத்தான் உடைந்திருக்க வேண்டும். சத்தம் கேட்டதோடு நில்லாமல் ஆறாவது மாடி ஜன்னல் வழியே புகையும் வெளிவந்தது.
ஒருவர் பின் ஒருவராக புகைவந்த ஜன்னலை பார்க்கிறார்கள். மீண்டும் அவள் தேவியா ஸ்ரீதேவியா என பேச்சு தொடங்கியது.
இன்னிக்கு என்ன நாளு இத்தனை மணிக்கு சாமி கூம்டு சாம்பரானி போடறாங்க என தலைவர் கேள்வியை எழுப்ப வரிசையினர் ஒவ்வொருவராக இன்றைய நாளின் சிறப்பை யோசிக்கலானார்கள். ஆறாவது மாடி நெருப்பு அடுத்தடுத்து பற்றியெரிய தயாரானது.
 
- தயாஜி-
 
நன்றி மலைகள்.காம் 2014

ஜூலை 28, 2014

தூப்புக்காரி : மலம் சுமக்கும் மனிதர்களிம் மனம் கனக்கும்.


"அழுக்கு அது இயக்க நிலையின் ஆதாரம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழுக்கும் கழிவும் உண்டு. அழுக்கும் கழிவும் இல்லையென்றால் அவன் வெறும் பிணம். சாக்கடையோரம் கடக்கும்போது மூக்கைப்பொத்தி, குமட்டலை வெளிப்படுத்தி தப்பித்தால் போதுமென்று ஓடும் பல மனிதர்கள் ஒருபுறம், ஆனால் சாக்கடையிலும் அழுக்கு சகதியிலும் காலூன்றி வாழ்க்கைப்பிழைப்பை நடத்தும் மேன்மக்கள் மறுபுறம்..”
-மலர்வதியின் முன்னுரையிலிருந்து


  மக்களின் மொழியில் இந்நாவல் எழுதப்பட்டிருப்பதை இதன் தலைப்பே உணர்த்துகிறது. தூப்புக்காரி என்பது வட்டாரச்சொல். கூட்டிப்பெருக்கி அள்ளுவதை குறிக்கின்ற சொல்தானிது. துடைப்பம் என்றும் விளக்குமாறு என்றும் ஆங்காங்கே சொல்கிற வழக்கமும் இருக்கிறது. மலேசியாவில் துடைப்பத்தை பலர் ‘ஜாடு’ என்றே சொல்கிறார்கள். கூட்டிப்பெறுக்குவதையும் குப்பைகளை அள்ளி துப்புரவு செய்கிற பெண்களை தூப்புக்காரி என அழைக்கப்படுகிறாள். ஆண்களாக இருந்தால் ‘தோட்டி’ என்ற சொல் வழக்கில் உண்டு.

     தோட்டி என்றதும் நினைவுக்கு வரும் விடயம், தகழி சிவசங்கரப்பிள்ளை எழுதி சுந்தர ராமசாமியால் தமிழில் மொழிபெயர்ந்த ‘தோட்டியின் மகன்’ என்ற நாவல்தான். அந்நாவலை வாசிக்கும் சமயம் தொட்டியின் அர்த்தம் தெரிந்திருக்கவில்லை. நண்பர்களுடன் கேட்ட பிறகே அதற்கான அர்த்தம் புரிந்தது. பின் தோட்டியின் மகனை வாசிக்கும் போது வேறு ஒரு உலகத்தை காண முடிந்தது. மேன் நிலையானாலும் கீழ்நிலையானாலும் நுண்ணரசியல் எங்கும் வியாபித்திருப்பதை அந்நாவல் வழி உணர்ந்தேன். ஜாதி வன்முறையும் பணக்கார சௌகரியங்களையும் ஒருங்கே காண முடிந்த நாவலாக அந்நாவல் இருந்தது. படித்து முடித்ததும். அந்நாவலை ஒருவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன், நாவல் குறித்து அவர் கேட்கவும், சுருக்கமாக தோட்டியின் மகன் குறித்து சொல்லிவிட்டேன். உடனே நாவலை திரும்ப கொடுத்துவிட்டு சொன்னார், “இந்த மாதிரிலாம் எதுக்கு எழுதனும்.. நம்ம நாட்டில் அப்படி இல்லையே… நீயே வச்சிக்கோ ”

   தான் பாதிக்காதவரை தன் வட்டாரம் அறிந்திருக்காதவரை எதையும் தெரிந்துக் கொள்ளவும் வலியை புரிந்துகொள்ளவும் அவர் தயாராக இல்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் இங்கே மிகுந்த தமிழ் பற்றாளர் என்ற பெயரை அவருக்காக பலர் தொடர்ந்து முன்மொழிந்து கொண்டே வருகிறார்கள். ஒருவேளை அவர் பெண் என்பதால் மலம், அசிங்கம் , தோட்டி என அவர் வாசிக்க விரும்பவில்லை என்ற நினைப்பு வந்தாலும்; எழுத்துக்கும் வாசிப்பிற்கும் ஆண் பெண் பேதமென்ன என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். பிறகு எந்த புத்தகத்தையும் அவருக்கு சிபாரிசு செய்வதை நிறுத்திவிட்டேன்.

   சமீபத்தில் இணையத்தில் தூப்புக்காரி நாவல் குறித்து சிலவற்றை பார்க்க நேர்ந்தது. தூப்புக்காரி நாவலை எழுதியவருக்கு சாகித்திய அகடாமியின் இளம் எழுத்தாளர் விருது கிடைத்தது. ஆனால் அதனை வாங்குவதற்குகூட செல்ல இயலாமல் கிராமத்தில் இருக்கிறார் மலர்வதி. டெல்லிக்கு செல்லவும் பணம் இல்லாத ஒருவர் அவர்.  அதுதான் அந்த நாவலை வாசிக்கதூண்டியது. விருது வாங்கியதால் அல்ல, விருதினை பெற்றுக்கொள்ளவும் செல்ல இயலாத சூழலிலும் ஒருவர் எழுதியிருக்கிறாரே என்பதுதான் காரணம்.

  அப்படிப்பட்டவரிடம் இருந்து வந்திருக்கும் எழுத்துகளை நம்பலாம் என்று என் மனம் சொல்லியது. இங்கே சினிமாவிற்கு பாட்டெழுதியவரெல்லாம் உயர்ந்த இலக்கியவாதியாக போற்றிய போதுதான் உண்மையான எழுத்துகள் வருகை தடைபட்டன. ஏற்கனவே சம்பாதிக்கின்றவரை நம் செலவில் அழைத்து வருவோம், தங்க வைப்போம், விழா எழுப்போம், புத்தக விற்றுக் கொடுப்போம். வழியனுப்புவோம். இங்கிருந்தும் நாம் போவோம். போட்டோ பிடிப்போம் பண்ணாடையுடன் மன்னிக்கவும் பொன்னாடையுடன் திரும்பி வருவோம். திடீர் சாம்பார் , திட்டிர் ரசம் போல திடீர் திடீர் என பொன்னாடை வாங்கியவர்களெல்லாம் இலக்கிய காவலர்களாக ஆகிடுவார்கள். ‘சந்தைக்கு போகிறபோது பரதநாட்டிய உடை வேலைக்காகாது’ என்று ஜெயமோகன் சொன்னதாய் படித்திருக்கிறேன். சொல்லப்போனால், கழிவறைக்கு போனாலும் இலக்கிய காவலர்களாக இருப்பவர்கள் இவர்கள் என்றே நினைத்து திடீரென சிரிப்பதை தவிர வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை.

   ஒரு பெண் படிக்கத் தயங்கிய ஒன்றையே இன்னொரு பெண் எழுதியிருக்கிறாள் என்றால் யார் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள். எது நிகழ்காலம் என்ற கேள்வி நம்மை நோக்கி எத்தனை முறை கேட்கிறோம். தூப்புக்காரியில் வரும் கதாப்பாத்திரங்கள் நிகழ்காலத்தில் வாழ்கிறார்கள். பந்தியில் மிஞ்சிய சோற்றை நாய்க்கு போடும்போதெல்லாம், நாயுடன் சண்டையிட்டு அதனை எடுத்து உண்கிறார்கள். அதுதான் நிகழ்காலம்.

   கனகம் என்ற தூப்புக்காரி, அவள் மகள் பூவரசி, பூவரசியின் காதலன் மனோ, பூவரசியை விரும்பும் மாரி போன்றவர்கள்தான் கதையினை நகர்த்திச் செல்கிறார்கள்.

   கனகம் கதை சொல்கிறாள், பூவரசி கதை சொல்கிறாள், மனோ கதை சொல்கிறான். இப்படி இவர்கள் சொல்லிக்கொண்டு போகும் கதையில் நாமுஜ்ம் சேர்ந்த்து செல்கிறோம். நம் முகத்திலும் நாற்றம் அறைகிறது. நம் கண்ணிலும் மாதவிடாய் துணி தெர்கிறது, நம் கால்களிலும் மலம் மிதிபடுகிறது.

  ‘தொட்டியின் மகன்’ நாவலில் சொல்லப்படும் அரசியலை இதில் பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நம்முடன் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களை காண முடிகிறது.

   பொது கழிவறைக்கு சென்றிருப்போம். எத்தனை முறை உள்ளே சென்று துர்நாற்றம் பொருக்காமல் ஓடி வந்திருக்கிறோம். எத்தனை முறை கழிவறை குழிக்கு நீர் பாய்ச்சாமல் வந்திப்போம். எத்தனை முறை சுவரில் எல்லாம் மூத்திரம் பெய்திருப்போம். மூத்திரம் என்று சொன்னதுமே பலருக்கு கிலி பிடித்தது போல உடல் உதரிவிடும். சிறுநீர் என்றுதான் சொல்லவேண்டும். ‘பீ’ என்றும் சொல்வது அருவருப்பானது, மலம் என்றே சொல்லுதல் வேண்டும். யாருக்கும் பீ என்றால் குமட்டும் , மலம் என்றால் வாசிக்கும் போல.

   இப்படி வார்த்தைகளே பேதப் படுத்துகிறதே இதனுடன் வாழ்க்கையை நடத்துபவர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

   ‘தூப்புக்காரி’, அவளுக்கும் மனம் இருக்கிறது, அதுவும் காதல் கொள்கிறது, பின்னர் களவி கொள்கிறது. தான் களவி கொண்டதை ஜன்னல் வழி பார்த்தவனையே திருமணம் செய்யும்படி ஆகிறது. பொதுவாகவே தாழ்ந்த ஜாதியினை கொண்டவர்களுக்குத்தான் தோட்டி வேலை கொடுத்து சமூகம் அவர்களை இன்னும் கீழேயே வைத்திருக்கும். இந்நாவலில் நாடார் ஜாதியில் இருந்து ஒரு தூப்புக்காரி வருகிறாள். தன் ஜாதிக்காரர்களிடமே கூட நெருங்க முடியாமல் அவர்கள் தின்ற எச்சில் இலையை அள்ளி போட்டு மிச்ச மீதியை உண்கிறாள்.

   தாயின் உடல் நலம் குன்றவே , மகள் அத்தொழிலை ஏற்கும் காட்சி படிப்பவர் மனதினையும் அவள் மனம் போல சூன்யமாக்குகிறது.

   கணவனும் இறக்கிறான், குழந்தையும் உடல் இளைக்கிறது, அவளும் மலம் அள்ளுகிறாள். அப்போதுதான் குழந்தையை தத்துக்கொடுக்க மருத்துவர் ஒருவர் கேட்கிறார். தான் போல அல்லாமல் தன் பிள்ளை நன்றாக வாழும் என்ற எண்ணத்தில் ஒத்துக்கொள்கிறாள் இளைய தூப்புக்காரி. அந்த நாளும் வருகிறது. புதிய பெற்றோர் கையில் தூப்புக்காரியின் குழந்தை. குழந்தை அணிந்திருந்த பழை கிழிந்த ஆடையை கழட்டுகிறார்கள். புத்தாடை அணிவிக்கிறார்கள். கழட்டப்பட்ட ஆடைக்கு பாதி பாதி என பணம் கொடுத்தது நினைவுக்கு வருகிறது தூப்புக்காரிக்கு.

   இன்னும் கொஞ்ச நேரத்தில் குழந்தை பணக்கார வாழ்க்கைக்கு பயணமாகப்போகிறது. அந்த நேரம் வந்துவிட்டது. சட்டென தூப்புக்காரி ஆவேசமாகிறாள். ரோசம் கொள்கிறாள். ஒரு முடிவுக்கு வருகிறாள்.

   அந்த இடம்தான் இந்நாவலை உச்சிக்கு கொண்டு போகவேண்டிய இடம். முதல் முறை படிக்கும் போது உச்சிக்கு அருகில் சென்றாலும், மீண்டும் படிக்கையில் நாடகம் போல் அமைந்துவிடுகிறது. ஆனாலும் சில விதிவிலக்கு நாடகங்கள் இருப்பது நாம் அறிந்ததே.

   மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்னும் நாவல் படிக்கவேண்டிய ஒரு புதினமாக மனதில் பதிகிறது. மலம் சுமக்கும் மனிதர்கள் நாம், மனம் வந்து இந்நாவலை படித்து அவர்கள் வாழ்க்கையை கொஞ்சமேனும் அறிய முயற்சிப்போம். அறிதல் மட்டுமே, புரிதலையும் மாற்றங்களையும் கொண்டுவரும் சக்தி.

தயாஜி

(நன்றி வல்லினம்.காம்)

மே 21, 2014

இன்னொரு கிளை முளைக்கிறது

           இன்னொரு கிளை முளைக்கிறது



    அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும் உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச் செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவேத் தெரியும். அந்த மரம் எப்போதும் தனித்தே தெரியும். அதன் தடிமனாகட்டும், இலைகளாகட்டும், அதில் தொங்கும் பிணங்களாகட்டும்.

   முதன் முதலாக தூக்கில் தொங்கியது ஒரு பெண்தானாம். அவளை தொடர்ந்து பலரும் மரக்கிளைகளில் ஆளுக்கு ஒன்றென தேர்ந்தெடுத்து தொங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆச்சர்யம் என்னவென்றால்; முதல் நாள் சிரித்துப்பேசியவர்கள் கூட அந்த மரக்கிளையில் வெளிவந்த நாக்குடன் நாண்டுகிட்டதும் உண்டு.

   இன்னும் அந்த மரத்தை குறித்து பல கதைகள் எனக்கு தெரியும்.  யார் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்கமாட்டேன். இக்கதைகளை எனக்கு சொன்னது அந்த மரம்தான். நம்புங்கள், கதைகளை சொன்னது அந்த மரமேதான். தன் கதைகளை என்னிடம் சொல்லும் அளவுக்கு மரமும் நானும் நெருங்க காரணமாக இருந்தவர் என் பாட்டிதான்.

பாட்டி.
  பார்ப்பதற்கு பாட்டி மாதிரியே இருக்காது. ஆனாலும் நாங்கள் பாட்டி என்று கூப்பிடுவதைதான் அவர் விரும்புவார். தாத்தாவும் அப்படித்தான் கூப்பிடுவார். இது எங்களுக்கு வேடிக்கையாகவே இருக்கும். வயதுக்கு ஏற்றார் போல கூன் வளைந்திருந்தாலும் தாத்தாவுக்கு என்னமோ இளமை ஊஞ்சலாடுவதாய் நினைப்பு. பாட்டிக்கு நிறைய கதைகள் தெரியும். தாத்தாவுக்கு தெரிந்தெல்லாம் ‘பாட்டி’, ‘பாட்டி’ மட்டும்தான். பாட்டியை இளமையாக வைத்திருப்பது அவர் வைத்திருக்கும் கதைகள்தான் என்று நினைத்துக்கொள்வேன்.

  தாத்தாவுக்கு போட்டி போடும் அளவுக்கு  பாட்டிக்கு நெருக்கமானது அந்த மரம். இன்னும் அந்த மரம் அப்படியே இருக்கிறது. கிளைகள் மட்டும் தூக்கில் தொங்குபவர்களுக்காக அவ்வபோது புதிது புதிதாக வந்துவிடும். தொங்கியவரை கீழே இறக்கும் போதே கிளையும் தானாக உடைந்துவிடும். அதுவரை தாங்கிய கிளை, முடிச்சினை அவிழ்க்கும் போது உடைவதன் காரணம் யாருக்கும் புரியவில்லை.
   இரவும் , விடியும் நேரமும் பாட்டி அந்த மரத்திடம் தனியேச் செல்வார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதைகளை பாட்டி சொல்வது அந்த மரத்திடம் இருந்து கேட்ட கதையாகத்தான் இருக்கும் என தோன்றியது எனக்கு. புத்தகங்களில் கூட படித்திருக்காத கதைகள் அவை.

பாட்டியின் கதைகளில், காடு, ஆதிவாசிகள், புலி, புல், மலை, மான் என இருக்கும். காடு மனிதர்களுடம் பேசும் .புலி இறகுகடன் பறந்துகொண்டே இறை தேடும். புல் நினைத்த நேரம் மரமாகும் பனி நேரம் புல்லாகும். மலை தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கும். மான், பூமிக்கடியில் வாழ்ந்துக்கொண்டிருக்கும். இப்படி பல.

  தாத்தா தூங்கிய பிறகே பாட்டி மரத்திடம் செல்வது வழக்கம். அன்றைய தினம் நானும் தாத்தாவும் ஒரு விளையாட்டு விளையாடினோம். பாட்டிக்கு தெரியாமல் பின்னால் செல்லவேண்டும். ஏன் தாத்தாவுக்கு அப்படி ஒரு விளையாட்டு விளையாட தோன்றியது என தெரியவில்லை. இத்தனை நாளாய் ஏன் அந்த விளையாட்டை விளையாடவில்லை எனவும் தெரியவில்லை. எப்படியும் பாட்டிக்கும் மரத்திற்கும் இடையில் இருக்கும் ரகசியம் இன்று தெரியப்போகிறது என்ற நினைப்பே என்னை தூங்கவிடவில்லை. வழக்கத்துக்கு மாறாக தாத்தா அன்று அடிக்கடி சிரித்துகொண்டே இருந்தார். பாட்டியையும் கிண்டல் செய்துக்கொண்டே இருந்தார்.

   நாங்கள் தூங்குவதை பாட்டி உறுதி செய்தார். வீட்டின் பின்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பாட்டி வெளியேறினார். தாத்தாவும் பாட்டி சென்றதை உறுதி செய்து, எழுந்தார். நானும் எழுந்துக்கொண்டேன்.

தாத்தா மெல்லியக்குரலில் “டேய் நீயும் தூங்கலையா..”

“பாட்டியை பாக்கலாம்னு சொன்னிங்க அதான் தூக்கமே வரல..”

“ச்சரி ச்சரி... சத்தம் போடாம என் பின்னாலயே வா...”

  தாத்தாவை பின் தொடர்ந்தேன். திறந்திருந்த பின்வாசக்கதவில் இருந்து தாத்தா எட்டி பார்த்தார். அடுத்து அவர் என்னை கூப்பிடுவார் என காத்திருந்தேன். தாத்தா கூப்பிடவில்லை. மெல்ல நானும் தாத்தாவுக்கு அருகில் சென்றேன். தாத்தா சிலை போல நின்றுக்கொண்டிருந்தார். தாத்தாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. வயதான பின்னர்கூட வந்திடாத நடுக்கம் அது. அது நடுக்கமா; பயமா.
மெதுவான குரலில் ‘தாத்தா..தாத்தா... என்ன பாக்கறிங்க.. நான் வரட்டா..?’
  
 தத்தாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. நடுக்கம் மட்டும் இருந்தது. இன்னும் அருகில் சென்றுவிட்டேன். தாத்தாவின் கையை பிடித்தேன். சுயநினைவு வந்தவராய் தாத்தா என்னைப் பார்த்தார். பார்த்தவர் திருப்பி மரத்தை பார்க்கவும். அவருக்கு எதிரில் பாட்டி நின்றுக் கொண்டிருந்ததும் தூக்கிவாரிப்போட்டது. அசாதாரண நடுக்கத்தை அவர் உடல் காட்டியது. அப்படியே என்னை பாட்டிக்கு தெரியாதது போல பக்கவாட்ட சுவரில் மறைத்தார்.

   விடிந்தது. தாத்தா இன்னமும் என் கையைத்தான் படித்துக்கொண்டே படுத்திருக்கிறார். எப்போதும் எழுப்பும் பாட்டியில் குரல் இன்று பல எதிரொலிகளாகக் கேட்டது. தாத்தாவும் பாட்டியும் பேசத்தொடங்கினர்.

“நீங்க கொடுத்த சத்தியத்தை மீறிட்டிங்க..”

“இல்ல பாட்டி, விளையாட்டுக்குத்தான்...”

“இதென்ன விளையாட்டு, சத்தியத்தை மீறிட்டு சாக்குபோக்கு சொல்றியா, நீ, விளையாட்டுன்னு...?”

முதன் முறையாக ஓர்மையில் அழைத்தார் பாட்டி.
“பாட்டி இதுவரைக்கும் நீ சொன்னதைதானே செய்தேன்..”

“போதும் போதும், நா அப்பவே உன்கிட்ட சொல்லிட்டேன்.... இதெல்லாம் நடக்கும்ன்னு, நீதான் சத்தியம் செய்றேன்...சாதித்துக் காட்டறேன்னு என்னை சம்ப்பதிக்கவச்ச..”

    பாட்டியின் குரல் கரகரத்தது. தங்க நிற முகம் நீல வண்ணமாகியது. அவளில் கண்களில் இதுவரை நான் பார்த்திடாத வன்மம் அரங்கேறியது. கண்கள் சிவந்தன. வானவில்லின் வண்ணங்கள் எல்லாம் அழிந்து , சிவந்த நிற கோடாய் மாறியது அவளது புருவம். கன்னங்கள் அதிர்ந்தன. அவள் உடல் உதரத்தொடங்கியது. தலையை ஆட்டவும் கழுத்துவரையிருந்த முடி பூமியைத்  தொடுமளவு வளர்ந்து கரு அலையென கூந்தல் பொங்கியது. நகங்கள் கூர்மையாகின. அவளின் உடல் வழக்கத்தைவிட பன்மடங்காகியது. உடுத்தியவைகள் கிழிந்தன. எப்படி, இத்தனை கரு நீலமாக இருக்க முடியும் உடல். நாக்கை அவள் நீட்டவும் அது, பூமிவரை வந்தது. நாக்கிலிரும்ந்து வழிந்துக் கொண்டிருக்கும் இரத்தம் அதன் வீச்சத்தை வீசியது.   கைகளை அகல நீட்டினாள். அவள் உஷ்ணமானாள். அது, பக்கத்திலிருப்பதையெல்லாம் பொசுக்குகிறது.

  தாத்தா தன் தவறை ஒப்புக்கொள்ளும் விதமாக மண்டியிட்டார். கைகளை கட்டிக்கொண்டு தலையை கவிழ்த்தார். எங்கிருந்து வந்ததென தெரியாமல் ஒரு கத்தி.. கத்திதான் என சொல்லிட முடியாது. மரத்தின் கிளை போலவும் இருந்தது. வலது கை உயர்ந்தது. மின்னலின் வேகமாய் தாத்தாவின் தலை துண்டிக்கப்பட்டது. தாத்தாவின் சுடு இரத்தம் என் முகத்தில் தெரித்தது.

   கூச்சல் சத்தம் திடுக்கிட வைத்தது.

  வீட்டிற்கு வெளியில்தான் கூட்டம் கூடியிருந்தது. தாத்தாவும் நானும் வியர்வையின் நனைந்துதான் எழுந்தோம். தலை இன்னமும் கழுத்தில் இருக்கிறதாவென தாத்தா தடவிப்பார்த்துக்கொண்டே எழுந்தார். நாங்கள் வாசல் கதவை திறந்தோம். கூட்டமாகத்தான் இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் கூச்சல் சத்தம் ஒப்பாரியாக மாறியது. அவர்களின் பார்வை மரத்தை நோக்கியே இருந்தது. எந்த சலனமுமின்றி தாத்தாவும் மரத்தை நோக்கி நடக்கலானார். நானும்.
  
 மரத்தின் கிளையொன்றில் பாட்டி தொங்கிக்கொண்டிருந்தாள். அழகிய முகம் இன்னமும் அழகாக தெரிந்தது. சிரித்த முகமாய் செத்திருந்தாள் பாட்டி. எல்லோரும் பாட்டியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். தாத்தா, பாட்டி தொங்கிகொண்டிருக்கும் கிளையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

  அந்த கிளை இதுவரை இங்கு இருந்ததில்லை. ஒரே நாளில் எப்படி முளைத்தது. அதும் பாட்டியின் உடலை தாங்கும் அளவுக்கு ஒரே நாளில் கிளை முளைத்ததா. தத்தாவின் கண்கள் இன்னும் அந்த கிளையிலேயே இருந்தது. அது பாட்டியல்ல, கிளையால் தாத்தாவின் தலையை வெட்டிய ஏதோ ஒன்று. அவருக்கு பித்து பிடித்ததாய் பேசிக்கொண்டார்கள். கைத்தாங்களாக சிலர் தாத்தாவை சிலர் அப்படியே நாற்காலியில் அமர செய்தார்கள். பாட்டி இன்னும் தொங்கிகொண்டுதான் இருக்கிறாள். அது தற்கொலையா இல்லை, மரத்தின் ஊஞ்சலாட்டமா என தெரியாதவாரு காற்றில் பாட்டி கயிற்றுடன் ஆடிக்கொண்டிருந்தாள்.

  சில நாட்களில் தாத்தாவும்  கிளையில் தொங்கினார். முகம் வீங்கி, நாக்கு வெளியே தள்ளியபடி பயங்கரமாக இருந்தார். பாட்டி தொங்கிய கிளைக்கு பக்கத்தில் ஒரு புது கிளை அது.

 கொஞ்ச நாள் , தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தார் தாத்தா. அவ்வபோது,
“இந்த சத்தியத்தை நான் காப்பாத்தியிருக்கனும்...நான் காப்பாத்தியிருக்கனும்... என்ன மன்னிச்சிடு”

   என்றே புலம்பலானார். தினம் இரவில் திடுக்கிட்டு எழுத்து தன் தலை, கழுத்தில் இன்னமும் இருக்கிறதாவென்று தடவிப்பார்ப்பதை அப்பாவும் கவனித்ததாய் சொல்லிக்கொண்டிருந்தார். பாட்டியின் இறப்புக்கு வந்திருந்த அம்மாவும் அப்பாவும், என்னை இனியும் அங்கு வைத்திருப்பது நல்லதல்லவென்று பள்ளி விடுமுறைக்கு முன்பே கூட்டிப்போவதாக சொல்லிக்கொண்டார்கள். தாத்தாதான்;

  “நான் இருக்கபோறது என்னமோ கொஞ்ச நாள்தான்.. அதுக்குள்ள ஸ்கூலு லீவு முடிஞ்சிடாது... மொல்லமாவே பேரனைக் கூட்டிப்போங்க” என்று என் கைகளை பிடித்துக்கொண்டு சொல்லுவார்.

   தாத்தாக்கும் பாட்டிக்கும் இடையில் என்ன சத்தியம் இருந்திருக்கும். பாட்டிக்கும் மரத்திற்கும் என்ன சம்பந்தம். அன்று, தாத்தா எதை பார்த்து ஸ்தம்பித்து நின்றார். என் கனவில் வந்தது போலவே அவர் கனவில் தலை துண்டிக்கப்படுப்வது வருகிறதா..? பாட்டியின் இறப்பை விட, பாட்டி தொங்கிய மரக்கிளை தாத்தாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது ஏன். இப்படி கேள்விகளுக்கு மேல் கேள்விகள் உள்ளுக்குள் இருக்க. அப்பாவி முகத்துடன் தாத்தாவுடன் நேரத்தை கடத்தினேன்.

  அப்பா தனியே அழைத்து, “அய்யா, தாத்தாக்கும் மனசு சரியில்ல... கொஞ்சம் பார்த்துக்கோ நாளைக்கு நானும் அம்மாவும் போகனும்... ஸ்கூலு லீவு வரைக்கும் இங்க இருந்துக்கோ... அப்பறம் தாத்தாக்கு ஒரு வழியை ஏற்பாடு செய்துடறோம். என்ன பார்த்துக்கறயா...? பயமா இருக்கா..?”

     பதிலையும் அவராகவே நினைத்துக்கொண்டு; அம்மாவுடன் மறுநாள் புறப்பட்டார்.
..................................................................................................................................

கார் புறப்பட்டது.

   ‘என்னங்க... இந்த வயசுல போய் உங்கம்மா தூக்குமாட்டிருக்காங்களே... பையனை வேற அந்த வீட்டுலயே விட்டுடு வந்திருக்கோம்... உங்க அப்பாவை   நினைச்சா... ’

  “என்ன.. என்ன சொல்ல வர.. எங்க அப்பாவை நினைச்சா... பைத்தியம் மாதிரி தோணுதா... மணிக்கு எதும் ஆகிடும்ன்னு நினைக்கறியா...?”

“அதான் உங்களுக்கே தெரியுதே நான் வேற சொல்லனுமா..”

   “தோ பாரு, அம்மா செத்துட்டாங்க... விதி முடிஞ்சிபோச்சி... அது தூக்குல போனா என்ன எவனாவது தூக்கிட்டு போனா என்ன.. போற வயசுதானே...அப்பாவே சொல்ராரு இன்னும்   எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியலைன்னு.... மணி ஒன்னும் சின்ன பையன் இல்ல... அப்படி ஒன்னும் மணிக்கு நடந்திடாது...”

   “எனக்கு என்னமோ மனசே சரியில்லங்க... அந்த மரத்தை பார்த்தாலே பயமா இருக்கு... பெசாம அதை வெட்டிட வேண்டிதானே...?”

   நாகலெட்சுமி சொல்லி முடிக்கவும், கார் எதையோ மோதித்தள்ளவும் சரியாக இருந்தது. கார் டயர் தேயும் அளவு சத்தம் கேட்டு, நிறுத்தப்பட்டது. அவளும் குமாரும் அதிர்ச்சியில் கொஞ்ச நேரம் காரைவிட்டு இறங்கவில்லை. அந்த சாலையும் சரியான விளக்கொளி இல்லாமல் அனாதையாகிக்கிடக்கிறது. எதை மோதினோம் யார்..என்ன.. போன்ற குழப்பத்தில் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள். தைரியத்தை வரவைத்துக்கொண்டு குமார், காரைவிட்டு இறங்கினான். பின், திரும்பி;

   “பயப்படாம இரு, நான் என்னன்னு பார்த்து வந்திடறேன்... கதவை லாக் செய்துக்கோ... பயப்படாத”

   இறங்கியவன் சில நிமிடங்கள், வியர்த்த முகமாய் காரில் ஏறினான். காரின் குளிர்சாதன பட்டன் அதன் கடைசி எல்லையை தொட்டிருந்தாலும் இன்னமும் கழுத்தில் வியர்வை திட்டுகள் இருக்கின்றன.

  “என்னங்க எதை மோதிட்டிங்க... பூனையா நாயா..?”

  “ஏன் மோதினது மனுசனா இருக்ககூடாதா..” என்றே சர்வ சாதாரணமாய் கேட்டான் குமார். சில சமயம் இப்படி பேசி தன் பயத்தை மூடி மறைப்பதில் கைத்தேர்ந்தவன் அவன் என்பதை இன்னும் அவள் புரிந்துக்கொள்ளவில்லை.

  “நாய் மாதிரிதான் தெரியுது”

என்றவன், வானொலியை திறந்த சத்ததை அதிகமாவ வைத்தான். மனைவி எரிச்சலில் ஒரு முறை பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டு, கைகுட்டையை முகத்தில் போர்த்திகொண்டாள். வானொலி சத்ததை குறைத்தவன், சில சம்வங்களை மனதில் நினைக்கலானான். இதன் காரணம் காரைவிட்டு இறங்கியவன் பார்த்த காட்சிதான்.

  இறங்கியவன், முதலில் காரின் முன் சக்கரத்தைதான் கவனித்தான் அப்படியொன்றும் இருப்பதாய் தெரியவில்லை. ஒரு முறை மனைவியைப் பார்த்துவிட்டு பின்னாள் சென்றான். அங்குதான் நின்றுக்கொண்டிருந்தது அந்த மரம். அம்மா அடிக்கடி போய் பேசும் அதே மரம்தான். குமாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி அந்த மரம் இங்கு வந்திருக்கும். அம்மா தொங்கிய அதே கிளைதான் அவனைப் பார்த்து அசைந்தது. இல்லை அசைத்தது.
   அந்த மரமே மாபெரும் மாயையாக தெரிந்தது. மாயையை எப்படி வகைப்படுத்துவது. மாயமா, மர்மமா, மாபெரும் உண்மையா, நிலைத்தன்மையா , புதிர் பிம்பமா.
   இருட்டிலும் ,இருட்டிக்காமல் அந்த மரம் நின்றுக்கொண்டிருந்தது. ஜொலிக்கவில்லை. ஆனால் மற்ற எதையும் தவிர தன்னை மட்டும் ஒளியால் சூழ்ந்திருந்தது அந்த மரம். மாய மரம். அம்மா அப்படித்தான் சொல்லிச் சென்றால்.

  “அது மாய மரம் அதான்... போ போ போய் படிக்கற வேலையைப்பாரு... இனிமேலும் அந்த மரத்துகிட்ட போய் விளையாடாத...”

   சிரித்துக் கொண்டே அம்மா சொல்லிச் சென்றால். அப்பா அந்த வழியே வந்தாலும். காது கேட்காது போல வேறெங்கோ பார்த்துக் கொண்டுச் சென்றார். அம்மா அப்பா வெளியில் செல்லும் வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தாள். அம்மாவும் குசுனிக்கு சென்றாள்.

   இனிமேல் அந்த மரத்துக்கு அருகில் செல்வது என்ன.. அந்த மரத்தை பற்றி யாரிடமும் சொல்வதுமில்லை என முடிவெடுத்துக்கொண்டேன்.

   விளையாடிக்கொண்டிருந்தோம். ஓடிப்பிடித்து விளையாடுவது. போலிஸ் திருடன் என்பது அதன் பெயர். எங்கள் குழுவில் யாரும் விளையாட்டில் கூட போலிஸாக விரும்புவதில்லை. காளிதாஸின் அப்பாவை போலிஸ்காரர்கள் கூட்டிச்சென்று, கொன்று விட்டார்கள் என்றதும் அதன் காரணங்களில் ஒன்று. இன்னொன்று, போலிஸ்தான் பிடிக்கவேண்டும். திருடர்கள் ஓட வேண்டும். எங்களுக்கு எப்போதும் ஓடத்தான் பிடிக்கும். விசுவின் அம்மாவும் இந்தோநேசியக்காரனுடன் ஓடியிருக்கிறார். பல ஆண்கள் ஆகியும் பிடிபடவில்லை.
  
 ஆளுக்கொரு இடத்தில் மறைந்துக்கொண்டார்கள். எப்படியோ பேசிப்பேசி பாலாவை போலிஸாக்கிவிட்டோம். சீக்கிரத்தில் அவன் கையில் மாட்டி போலிஸாக விரும்பவில்லை. ஆகவேதான் அவன் யோசிக்காத இடமாக இருக்கும் மரத்திடம் சென்றேன். இயல்பாகவே எங்களுக்கு அந்த மரத்திடம் பயமிருப்பதால். நான் அங்குதான் மறைவேன் என பாலா யோசித்திருக்கமாட்டான். எனக்கே ஆச்சர்யமாக தோன்றிய ஐடியா அது.

   என்னைப்போல இரண்டு மூன்று பேராவது ஒரு புறம் நின்றால், மறுபுறம் தெரியாது. அவ்வளவு அடர்த்தி அந்த மரம். அப்படியிருந்தும், மறைந்தது போதாதென்று. மரத்தில் ஏறலாம் என நினைத்தேன். ஏறினேன். கடினமாகவேத் தெரியவில்லை. யாரும் பின்னால் இருந்து தள்ளினார்களா.. யாரும் முன்னால் இருந்து இழுத்தார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஏறுவது அவ்வளவு இதமாக இருந்தது.

   இலைகளுக்கு நடுவில், பெருத்த கிளையொன்றின் வளைவில் அமர்ந்துக்கொண்டேன். கை சும்மா இருக்கவில்லை. கிளையின் காய்ந்த மட்டைகளை பிய்த்துக்கொண்டிருந்தது. மரம் சமபந்தம் இல்லாமல் குலுங்கும்போதே எச்சரிக்கையாகியிருக்கலாம். அமர்ந்திருந்த கிளை சட்டென முன்னோக்கி உருண்டது. அபப்டியே கீழே விழப்போனேன். தரைவரை போய்விட்டேன். இதயம் ஸ்தம்பிக்கும்படி இலைகளால் சூழப்பட்டேன். இறகு  முளைத்த இலைகள் அவை. அப்படியே என்னை தாங்கின. அப்படியே மேலே கிளைவரை கொண்டு போனது. நான் பிய்த்து போட்ட காய்ந்த மரப்பட்டைகள். நெளிந்துக்கொண்டு மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொண்டது. பாலாவின் குரல் கேட்டது. இறகு முளைத்த இலைகள் என்னை எந்த சேதமுமில்லாமல் கீழே இறக்கிவிட்டன.

   விளையாட முடியாமல். வீட்டிற்கு சென்று அம்மாவிடம் சொன்னதும்தான் அம்மா அப்படியொரு பதிலும் அப்பா கண்டுக்கொள்ளாமல் சென்றார். அந்த மரம் எங்களை காக்கும் தெய்வம் போல நினைத்தாலும். அதன் அருகில் செல்வதை தவிர்த்தேன்.

   அந்த நம்பிக்கையை அம்மாவின் தற்கொலை கொலை செய்தது.
“மணி... மணி...”

“என்னங்க தூங்கிட்டிங்களா... வந்து எவ்வளவு நேரம் ஆச்சோ....”

    கண்விழித்தவனுக்கு விடிந்தது அப்போதுதான் தெரிந்தது. எப்போது வந்தோம் எப்போது தூங்கினோம் என்றே தெரியவில்லை. வீட்டு வாசலிலிருந்த காரிலிருந்து இறங்கினார்கள்.

“ஆமா மணி எங்க...”

“என்ன விளையாடறிங்களா... நீங்கதானே மணி லீவு முடியர வரைக்கும் உங்க அப்பாகூட இருக்கட்டும்ன்னு சொன்னிங்க...”

“நானா சொன்ன..?”
“இல்ல... செத்துப்போன உங்க தாத்தா சொன்னாரு...”

   என்று தான்பட்டுக்கு, காரிலிருந்த பொருள்களுடன் வீட்டிற்கு சென்றாள். குமாருக்கு குழப்பமாகவே இருந்தது. சட்டென மாய மரம் கண்முன் தோன்றி மறைந்தது.

   அம்மா தொங்கிகொண்டிருக்கிறாள். மீண்டும் ஒரு கிளை முளைக்கிறது. அதிலிருந்து இலைகளே கயிறாக ஒன்றினைகிறது. அதன் நுனி மரத்தை ஒரு சுற்று சுற்றியப்பிறகு வீட்டிலுள் சென்றது.

   “என்னங்க.. என்ன செய்றிங்க.. சாமான்களை எடுத்துட்டு வரிங்களா..”

........................................................................................................

“நீங்க இனிமேல என்ன பாட்டின்னு கூப்பிடனும் சரியா..?”  

   “எனக்காக நீ வந்திருக்கும் போது உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்யத் தயாரா இருக்கேன்...”

“ஏன்னு கேட்க மாட்டிங்களா...”

  “ஏன் கேட்கனும்... நீ யாரு... இந்த காட்டு ராணி. நீ மட்டுமில்லன்னா என்னை இதே இடத்துல கொன்னு, உங்க ஆளுங்க சாப்பிட்டிருப்பாங்க...”

  “வேணாம் அதை பத்தியும் இனிமேல பேச வேண்டாம். நாம் உடனே இங்கிருந்து போகனும். சொன்ன வாக்கை காப்பாத்துவிங்களா...?”

  “என்னோட தலை என் கழுத்துல இருக்கிற வரைக்கும்... எதைப்பத்தியும் உன்கிட்ட கேட்க மாட்டேன்..”

   பாட்டி, கையை நீட்டினாள். அவன் கையை பற்ற முயற்சிக்கும்போது. பக்கத்திலிருந்த மரம் தன் கிளையை அவள் கையுடன் வைத்து பற்றியது. அவள் அந்த கையை இறுக பற்றினாள். அந்த கிளை கொஞ்சம் கொஞ்சமாம அவள் கைப்பிடியளவு கிளையை விட்டு பாதியை தானே முறித்து, உடைத்து மீண்டும் மரத்துக்கே திரும்பியது.

   அவள் , தன்  மார்பை மறைந்திருந்த தடி இலையை கழுத்து வழியே வெளியேடுத்தாள். தங்கமென வர்ணிக்கும் வகையை சார்ந்த தங்கம் அது. மார்புக்கு மத்தியில் கையில் கிடைத்த கிளையை வைக்கிறாள். சதை பிளந்து கிளை மார்புக்கூண்டுக்குள் அடைக்களமாகியது.

..............................................................................................................................

     யாருக்கும் தெரிந்திருக்காத ரகசியம் அது. உங்களுக்கு மட்டும் சொல்ல நினைக்கிறேன். கேளுங்கள். அதற்கு முன் பாருங்கள் அந்த மாய மஹா மரத்தில் புது கிளை முளைக்கிறது. நம்மில் யார் நாக்கு தொங்கி சாகப்போகிறோம்.

   விட்டுவிடுங்கள் நாம் காத்துக்கொண்டிருக்கும், மறைத்துக் கொண்டிருக்கும். நினைத்து நினைத்து சிரித்தும் அழுதும் கொண்டிருக்கும் ரகசியங்களுடன் இதனையும் சேர்த்துக்கொண்டு நிம்மதியாக தூங்குங்கள். தொங்குவதற்கு முன்பாவது கொஞ்சம் தூங்கலாம்.






எழுத்து - தயாஜி  

மே 2014 'கல் குதிரை'யில் வெளிவந்த எனது சிறுகதை. 
நன்றி கோணங்கி, 
நன்றி நண்பர் லஷ்மி சரவணக்குமார்








பிப்ரவரி 18, 2014

கிடக்கும் மனிதனில் நடக்கும் பிணம் நான்






நடைப்பயணம்

வழி நெடுக்க
பிணங்கள்

நடமாடியும்

நடனமாடியும்

அறிமுகமற்ற

ஆடையற்ற

ஆட்கள் மன்னிக்கவும் பிணங்கள்

அக்குல்களில் வாடையுடன்
வரவேற்புக் கைகளுக்கு
இடையில்

நான்

ஆற்றைக் கடக்காமலே
முதலையின் முதுகில் கால் வழுக்கினேன்

காப்பாற்றி கரைசேர்க்கிறது
பிணம் ஒன்று

ஏறக்குறைய என் சாயல் கொண்ட
பிணமது

நானாகவும் இருக்கலாம்

நாங்கள் கைகுழுக்கினோம்

இந்த முறை அக்குல் வாடை
பழகிவிட்டது

எனக்கும் வாடை
வீசத் தொடங்கியது

நடந்துக் கொண்டிருக்கும்
பிணங்களின் வருசையில்

காலி இடமொன்றுத்
தெரிய...

பிணமான நானும்
இணை சேர்ந்தேன்

எல்லாம் சரி

எப்போது நான் பிணமானேன்

பயணத்தின் பொழுதா

முதலை மேல் வழுக்கிய பொழுதா

என்போல் பிணம் கைகொடுத்த பொழுதா

அக்குல் வாடையை ஏற்ற பொழுதா

காலி இடத்தில் இணைந்த பொழுதா

பதில் அல்லது பதில்கள்

தெரியும்வரை
விழித்தல் கூடாது

இடையில்
விழித்தாலோ

உடல்
அசைந்தாலோ

வாடை
மறைந்தாலோ

மீண்டும்
மனிதனாவேன்

பயமாய்
இருக்கிறார்கள்

மனிதர்கள் (மட்டுமே)

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

ரெண்டுகால் பூச்சியும் எட்டுகால் மனிதனும்

    அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.
    படித்தும் வேலை இல்லாதவன் எங்கும் வேலை செய்வான் தானே. நானும் அப்படித்தான். ஒருவேளை நான் படித்தவன் என்பதால் கூட வேலையில்லாதவனாக இருக்கலாம்.  ஆனால் வேலை அவசியம். என் நிலை அப்படி. முன்பெல்லாம் கேள்விகளுக்கு பதில் சொன்னால்தானே வேலை கொடுப்பார்கள். இப்போதும் அப்படித்தான் என்கிறீர்களா. சரி சொல்லுங்கள் ஆக கடைசியாக நீங்கள் எப்போது வேலை கேட்டீர்கள். அதான் நேர்முகத் தேர்வுக்கு சென்றீர்கள். ஓராண்டுக்கு முன்பு? ஈராண்டுக்கு முன்பு? ஐந்தாண்டுக்கு முன்? இருக்கலாம். எப்படியும் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் இருக்கலாம். சரியா. என்னமோ நேற்று வேலைக்கு சென்று, பதிகளைச் சொல்லி, வேலை கிடைத்ததும், இன்று வேலைக்கு கிளம்பும் தோணியில் நீங்கள் பதில் சொல்லியிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
   நான் இன்றைய நாளோடு இரண்டாவது ஆண்டாக நேர்முகத் தேர்வுக்கு செல்கிறேன். எப்படி அவ்வளவு துல்லியக் கணக்கு என்கிறீர்களா..? யோசிக்கிறீர்களா..? காலையில்தான் அப்பா பஜனை பாடினார். “இன்னையோடு ரெண்டு வருசமா தண்டச்சோறு சாப்டறடா..” என்றார். பதில் ஏதும் பேசவில்லை. கேள்வி மட்டும் கேட்க நினைத்தேன். வேலை இல்லாதவன் என்ற ஒரு காரணத்துக்காக, வாசலில் யாரும் வந்திருந்தால் நான் தான் போய் பார்க்கனும். தபாலைக் கூட நான் தான் வாங்கனும். கூரைக்கு கீழ் சுற்று காத்தாடி முதல், தரை மேல் தூசியிருந்தாலும் நான் தான் வசைப் பாடப்படுவேன்.
அப்பா,
“ஏண்டா சும்மாதானே இருக்கே , அந்தா காத்தாடியை சுத்தம் செய்யேன்”
அம்மா;
“ஐய்யா இப்பதான் பார்த்தேன், மிளகாய் முடிஞ்சிருச்சி.. பக்கத்து கடைக்கு போய் வாங்கிட்டு வந்திடறயா..? சமைக்கனும்... சீக்கிரம்ம் வந்திடு..” (பக்கத்து கடை என்பது, வீட்டில் இருந்து அரை மணிநேரம் நடக்கவேண்டும் அதிலும் நான் நடந்தே போகவேண்டும்)
அண்ணன்;
“இந்த இந்த சட்டையை அயன் செய்திடு, அன்னிக்கு மாதிரி அங்கொன்னும் இங்கொன்னும் மாதிரி செய்துடாத.. எனக்கு வேலைக்கு மணியாகுது..”
    இந்த அண்ணன்களே இப்படித்தான். அதிலும் எங்க அண்ணன் ஒரு படிமேல. எல்லாரும் ஏமாந்த மொளகா அரைப்பாங்கன்னுதானே  சொல்லுவாங்க, எங்க அண்ணன் மொளகா.. பருப்பு... காய்கறி... இப்படி எதுஎதையோ அரைச்சிடும். அப்படியே நங்கென தலையில் கொட்டதான் ஆசை. முடியாது. வேலை கிடைக்கும்வரைதான் அப்பு உனக்கு மரியாதை. வேலை மட்டும் கிடைக்கட்டும் அப்பு உனக்குதான் முதல் ஆப்பு. அடுத்த ஆப்பு எங்க அப்பாவுக்கு. என்னடா இவன் ஆப்பு கீப்புன்னு அசிங்கமா பேசரானேன்னு நெனைச்சிடாதிங்க. இதுக்கு என் மனசாட்சி. யார் மனசாட்சிதான் நாகரிகமா பேசியிருக்க சொல்லுங்க.
      இன்றும் வேலைக்கு சென்றேன். வேலைக்கு என்றால் வேலைக்கு அல்ல, வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு. எப்படியும் வேலை கிடைச்சிடும். எப்படின்னு கேட்கறிங்கலா? எல்லாமே நம்பிக்கைதான். இதை வச்சித்தானே தன்முனைப்பு அந்த முனைப்புன்னு நாட்டுல நிறைஅய் பேரு வேலை செய்ஞ்சு சம்பாதிக்கறாங்க. உடனே கோவப்பட்டு போய்டாதிங்க மீதி கதையை யார் படிப்பா..?
    வழக்கமான நடைபாதையில்தான் அன்றும் சென்றுக் கோண்டிருந்தேன். பாதைதான் பழையது. இங்கு காலை வேலையில் வந்தும் பறந்து இருக்கும் பறவைகள் ஒவ்வொன்றும் புதியவை. ஏன் முதல் பார்த்த பறகைளை மறுநாள் பார்க்க இயலவில்லை. ஒரு வெலை மனிதர்களை ஏமாற்ற பறவைகளும் மாறுநாள்களில் மாறுவேடம் போட்டு உலாவுகிறதோ. இருக்காது, பறவைகள் எல்லாம் நம்ம அளவுக்கு இல்லை. அவை இன்னமும் நல்லவையாகத்தான் இருக்கும் @ இருக்கனும். பறவைகள் என்றது ,எப்போதோ படித்த ஜோக் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருவர் மற்றொருவரைக் கேட்கிறார்,
“இந்த வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருது தெரியுமா..?”
“தெரியலையே..”
“இதுகூடவா தெரியலை, வேடந்தாங்களுக்கு வரக்கூடிய பறவைகள் மட்டும் இல்லை, எல்லா பறவைகளும் முட்டையில் இருந்தான் வருகின்றன...”
   படித்ததும் சிரிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. ஆனாலும் நான் சிரித்து வைத்தேன். இல்லாவிட்டால் வேலையில்லாதர்கள் எப்போதுதான் சிரிப்பது. வீட்டில் சிரிக்கவிட்டால்தானே.
    புதிது புதியாய் வந்திருக்கும் பறவைகளை பார்த்துக் கொண்டே நடப்பதில்தான் எத்தனை சுகம். ஆனால் இன்று பார்வைக்கு அந்த சுகம் முழுமையாகக் கிடைக்கவில்லை.
     ஏதோ காகிதத்துண்டு என் காலடியில் விழுந்ததை எப்படித்தான் பார்த்தேன். தெரிடவில்லை. ஆனால் பார்த்தேன். கையில் எடுக்கும் முன் என் கையில் வைத்திருக்கும் என வண்ணவண்ண சான்றிழ்தல்களை இருக்கமாக பிடித்துக் கொண்டேன். நான் கீழே குணியும் போது என் சான்றிதழ்கள் எதிர்பாராவிதமாய் பறக்கவும், அதை எடுக்கவும், எனக்கு ஒரு பெண்ணின் உதவி கிடைக்கவும், நான் இளிக்கவும், பதிலுக்கு அவளும் சிரிக்கவும், எங்கள் காதல் முழைக்கவும் இப்படியெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் . ஒருவேளை என் போன்ற அழகான வாட்ட சாட்ட வாலிபனுக்கும் நடக்கலாம்தானே. அதான் ஒரு முன்னெச்சிரிக்கை. வேலை கிடைக்கும்வரை காதலும் வேண்டாம்... மோதலும் வேண்டாம்.
    நல்லவேலையாக என் சான்றிதழ்களை பிலாஸ்டிக்கில் கோப்பில் வைத்திருந்தேன். இல்லையென்றால் எப்போதோ என்  விரல் வியர்வை, சான்றிதழ்களை வீணாக்கியிருக்கும்.
   காலில் பட்ட காகித்தை எடுத்துப் பார்த்த்தில் இன்ப அதிர்ச்சி. ‘வேலைக்கு ஆள் தேவை’ எனும் விளம்பரம். யாரோ வெட்டியிருக்கிறார்கள் . ஆனால் தவறவிட்டுவிட்டார்களே. ஒருவேளை எனக்காகக் கூட வெட்டியவர்கள் இதனை தவறவிட்டிருக்கலாம்.
   என்ன வேலை, அட அறிவியல் கூடத்தில் வேலையா..? உடல் முழுக்க வெள்ளை அங்கியை போட்டுக் கொண்டு ஒரு மூக்கு கண்ணாடியை மாட்டிக் கொண்டு இரண்டு கைகளையும் கால்சட்டைப் பாக்கேட்டுக்குள் விட்டுக் கொண்டு கூன் விழுந்த மாதிரி வேலை செய்யவேண்டுமே. கண்ணாடியென்றது இன்னொரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
   ஒருத்தருக்கு காதை வெட்டினா கண்ணு தெரியாதாம் அது என்ன? தெரியலையா.. அதாங்க விடையை முதல்லயே சொல்லிட்டேனே.. நீங்க போய் முதல்ல எழுதன தலைப்படி படிச்சி அதான் விடைன்னு புரிஞ்சிக்காதிங்க. அவ்வளவௌ மேல எல்லாம் போக வேண்டாம். இந்து ஜோக்குக்கு மேல போய்  மூக்கு கண்ணாடின்னு இருக்கும் பாருங்க அதை படிச்சிட்டு வாங்க. அதான் விடை. அதுசரி இது என்ன விடுகதையா நகைச்சுவையா? தெரியலை வேலையில்லாததால எதுஎதையோ படிச்சி சிரிக்கும்படி என் நிலமை ஆகிடுச்சி பார்த்திங்கலா. இனியும் அது தொடராது. ஏன்னா எனக்குத்தான் வேலை கிடைக்கப் போகுதே. ஆனா அந்த வெள்ளை அங்கியும் மூக்கு கண்ணாடியும் இருக்கே.....
    அதிலும் எனக்கு வெள்ளையங்கியும் பழைய தாத்தா காலத்து மூக்கு கண்ணாடியையும் கொடுத்தால், பொறுத்தமாக இருக்கும்மோ இருக்காதோ.
     ஒன்னு செய்யலாம். அறிவியல்காரர்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. இவர்கள் ஜீன்ஸ் டீ-சர்ட் எல்லாம் போட்டுக் கொண்டும் ஏன் பணியன் கூட போட்டு கொண்டு வேலை செய்யலாம் என புரட்சி செய்திடவேண்டியதுதான். என்ன ஒன்னு தனியா செய்தா எடுபடாது. கூடாவே ஐந்து பேரை சேர்த்துக்குவோம். அப்பறம் ஆளுக்கு ஒரு கட்சியா, என்ன சொன்னேன் ஆளுக்கு ஒரு கட்சியா சொன்னே..! அதை மறந்திடுங்க. ஆளுக்கு ஒரு காட்சியா பிரிஞ்சி போய்ருவாங்க. நேய் வருவதற்கு முன்பே பூனை ஒடிஞ்ச கதைதான். ஆமா பூனையா சொன்னேன் இல்லையில்லை, பூனையில்லை ஒடிஞ்சது பானை.
     அறிவியல் கூடத்தில் வேலை செய்வதில் சம்பளத்தையும் தாண்டிய லாபமும் இருக்கிறது. எனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்த நோய் வந்தாலும் நானே மருந்து கொண்டுவந்து கொடுத்திடுவேன். அதிலும் எங்க அண்ணனுக்கும் எங்க அப்பாவுக்கும் வாயே திறக்க முடியாத அளவுக்கு ஏதாவது மருந்து இருக்கா பார்க்கனும். எனக்கும்கூட அடிக்கடி சளி பிடிச்சி ஒழுகுது . மூக்கு சளியை பற்றிகூட ஒரு ஜோக் படிச்சிருக்கேன். சொல்லவா..? வேணாம்ங்க. பாவம் நீங்க. ரொம்பதான் பாடாய் படுத்தறேன் போல. சரி ஜோக்கை விடுங்க. வேலைக்கு வருவோம். சாதாரண வேலையா இது; அறிவியல் கூடத்தில் வேலை.
    ஒருவேளை அறிவியல் கூடத்தில், குப்பை அள்ளும் வேலையோ...? ச்செ ச்சே அதெல்லாம் இருக்காது. இருந்துட்டா என்ன செய்றது? எங்க வேலைன்னு மட்டும் சொல்லுவோம். என்ன வேலைன்னு சும்மா எதையாவது சொல்லிவைப்போம். வந்து பாக்கவா போறாங்க. நாட்டுல அவங்கவுங்களுக்க அவுங்கவுங்க வேலை. அதுவும் இப்போ அங்கயும் இங்கயும் மாறிமாறி கூட்டம் போடறாங்க.. அதுவும் ஒரு வேலையாகிப் போச்சி இப்போ. அதுக்கும் பணமெல்லாம் கொடுக்கறாங்களாமே..? எனக்குத் தெரியலை.
      எப்படியும் இந்த வேலை எனக்குத்தான் என நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த இரண்டாண்டுகளும் ஒவ்வொரு நேர்முகத் தேர்வுக்கு இப்படித்தான் நினைத்துக் கொண்டு சென்றேன்.கிடைக்கவில்லை. இப்போது மட்டும் எப்படி கிடைக்கும் என நான் இப்படி நம்புகிறேன். ஏதாவது காரணம் இருக்குமோ?
    இருக்குமோ இருக்காதோ... நாம் முயலத்தானே வேணும்.
    அய்யோ, எங்கே இந்த கடித்தில் தொலைபேசி எண்களைக் காணவில்லையே. ஹப்பாடா.. இருக்கிறது ஆ... என்ன இது ஒரு எண் குறைகிறதே. ஏன்யா இந்த விளம்பரத்தை வெட்டின மூதேவி, ஒரு கடித்தையே உன்னால ஒழுங்கா வெட்ட முடியலையே, உன்னையெல்லாம் அறிவியல் கூடத்தில வேலை சேர்த்தா என்ன ஆகுமோ..  அதான் கடவுளா பார்த்து, இல்லையில்லை கடவுளைப் பற்றி பேசக்கூடாது. அறிவியலைப் பொருதவரை எதுவும் அவன் செயல் இல்லை, எல்லாமே அவனவன் செயல்தான்.
   யோசிப்போம்.
    அட ஆமாம்ல்ல, கடைசி எண்தானே இல்லை. ஒன்றில் இருந்து ஒன்பது வரை இருப்பதே ஒன்பது எண்கள்தானே . ஒவ்வொரு எண்ணையும் கடைசி எண்னாக வைத்து அழைத்துப் பார்க்கலாமே. யோசிக்கிறீர்கள்தானே ஒன்றில் இருந்து ஒன்பது வரை ஒன்பது எண்கள் இருந்தாலும், கடைசியாக இருக்கும் பூஜ்ஜியத்தையும் சேர்க்கவேண்டுமே. என்ன..? பூஜ்ஜியமா..! தமிழ்த்தாயே ஐ ம் சாரி, பூஜ்ஜியம் என சொல்லிவிட்டேன். நியாயமாக சுழியம் என்றுதானே சொல்லியிருக்கவேண்டும். ஒன்ஸ் எகைன், ஐ சாரி மை டியர் தமிழ்த்தாயே. 
   எப்படியும் உடனே அழைத்துப் பேச வேண்டும். வேலை கிடைப்பது என்ன சும்மாவா. அதுவும் அறிவியல் கூடத்தில் வேலை. இப்போதே கற்பழிக்காத பொது தொலைபேசியைத் தேடவேண்டும்.
    இவ்வளவு பேசறவன்கிட்ட போன் இல்லையான்னு யோசிக்காதிங்க. பழைய மோடல் நோக்கிய போன். இருக்கு. அதாங்க தரையில் விழுந்தாலும் தரையை சிமண்டை உடைத்து , அப்படியே இருக்குமே அந்த போன்தான். என்ன போனிருக்கு, பணமில்லை. வேலைவெட்டி இல்லதவனுக்கு சோறும் போனுமே தண்டம் எதுக்கு போன்ல காசு என சொல்லித்தான் போனை கொடுத்தார் அப்பா. அவர்கள்தான் தேவையென்றால் என்னை கூப்பிடுவார்கள். நான் யாரைக் கூப்பிட்டு வேலை சொல்வது..? என் பேச்சைத்தான் கேட்பார் யாருமில்லையே.
    கையில் இருக்கும் சில்லறைக் காசுகளை பயபத்திரமாக பயன்படுத்த நினைத்தேன்.
    அதிஸ்டம்தான் இரண்டாவது அழைப்பே கிடைத்துவிட்டது.
“ஹல்லோ”
    பெண்குரல் கேட்டது. பெண்ணாகவும் இருக்கலாம். சார் எனவும் கூப்பிடாமல் மேடம் எனவும் கூப்பிடாமல் சமாளிப்பது சிரமம்தான். குரலைக் கேட்டாலே தெரிந்திடுமே என்கிறீர்கள்தானே. அது சரி நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இப்போதெல்லாம் குரலுக்கும் உடலுக்கு சம்பந்தமில்லை. இதை வைத்துக் கூட நிறைய பட ஜோக்குகள் வருகின்றன. எனக்கு எழுதத் தெரிந்த அளவுக்கு படம் வரையத் தெரியாது. அதனால் அந்த பட ஜோக்கை உங்களுக்கு காட்ட இயலவில்லை.
    நாளைக்கே நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டுமாம். அவர்களே காரை அனுப்பிவைப்பார்களாம். மீண்டும் அவர்களே கொண்டு வந்து வீட்டில் இறக்கிவிடுவார்களாம். வேலை கிடைத்தாலும் வேலை கிடைக்காவிட்டாலும் இப்படி செய்வார்களா என கேட்டுத் தெளிந்துக் கொண்டேன். இல்லையென்றால், யார் நடந்து வருவார்கள். அவர்கள் சொல்ன்ன முகவரியே எனக்கு புதிதாக இருக்கிறது. எவ்வளவு தூரமோ என்னமோ.
    மறுநாள் காலை, மடிப்பான சட்டையின்றைப் போட்டுக் கொண்டேன். குறுக்கும் நெடுக்கும் வீட்டு வரவேற்பறையில் நடந்துக் கொண்டிருந்தேன்.
அம்மா;
“எங்கய்யா காலையிலேயே...?”
“வேலைக்கு”
அப்பா;
“எங்கடா..?”
“வேலைக்கு...”
அண்ணன்;
“என்ன சார் காலையிலேயே கலக்கலா இருக்கிங்க...”
“வேலைக்கு...”
    வேலைக்கு என்ற ஒன்றைத் தவிர வேறேதும் சொல்லத் தெரியவில்லை. சொல்லவும் தோணவில்லை.
   சொன்ன நேரத்தில் கார் வந்தது. எதிர்ப்பார்க்கவில்லை. உயர் ரக கார். வீட்டில் எல்லோரும் என்னையே வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கம்பீரமா நடந்து காரின் பின் சீட்டில் ஏறினேன். அப்பதானே நமக்கு கௌரவம். நல்லவேலை டிரைவர் ஒன்னும் சொல்லவில்லை. வீட்டாரின் விரிந்த கண்களை இதுநாள் வரை நான் கவனித்திருக்கவே இல்லை. ஆமாம், அவர்களின் முகம் பார்த்து பேசினால்தானே கண்ணை பார்க்க முடியும். கார் சென்று மறையும் வரை அவர்களின் விரிந்தக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய கண்கள்தான். ஒன்னு தெரியுமா, நான் போட்டிருக்கும் சட்டை, என் அண்ணனுடையது. காலையில் நான் கொடுத்த அதிர்ச்சியில் அண்ணன் அதை கவனிக்கவில்லை. இதை கணித்திருந்தால் அவனுடைய கால்சட்டையையும் போட்டிருப்பேன். ஏமார்ந்தேன்.
     காரில் நான் மட்டும் இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன். டிரைவர் எந்த ஒரு அசைவோ பேச்சோ இல்லாமல் காரை ஓட்டிக் கோண்டிருந்தான்.
     என்ன இது , டிரைவர் அல்ல இது டிரைவி.!
     பெண்தான் காரை ஓட்டுகிறாள். நல்லவேலையாக அவள் சட்டை பட்டன் திறந்திருந்ததைப் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். அவளின் மூக்கை போலவே கண்ணும் கூர்மைதான். இல்லையென்றால் கண்ணாடியைப் பார்த்தே தன் சட்டையை சரி செய்துக் கொண்டாள்.
     ச்சே என்னை, என்ன நினைப்பாள் அவள். முதல் சந்திப்பிலேயே இப்படியே நடப்பது. இதில் என் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஆமாம். எனக்கு நீல வண்ணம் மிகவும் பிடித்தமான ஒன்று. யார் அவளை அந்த வண்ணத்தில் உள்சட்டை போடச் சொன்னது. அதான் வண்ணம் என்னை இழுத்துவிட்டது.
     அது சரி, ஏன் பெண்னை அனுப்பியிருக்கிறார்கள். ஒருவேளை ஒழுக்கத்தை பரிசோதிக்கவா? இந்த பெண் இதை சொன்னால் எனக்கு அந்த அறிவியல் கூடத்தில் வேலை கிடைக்காமல் போய்விடுமே. என்ன செய்வது.  முதல் சோதனையிலேயே தோல்வியா எனக்கு. இந்த வேலையும் எனக்கு கிடைக்காதா.
    வேலை மட்டும் கிடைக்கவில்லையென்றால், இனி திரும்பி வீட்டிற்கு செல்லவேக் கூடாது.
     கார் அதன் வேகத்தை குறைக்காமல் சென்றவண்ணமே இருக்கிறது. அவள் சட்டையை சரி செய்ததோடு சரி, வேறெதையும் சட்டை செய்யவில்லை. அவள் என்ன இயந்திரமா..? ச்சே இது என்ன சுஜாதா கதையா, இயந்திர மனிதர்கள் வந்து போக.
    கார் நின்றது. அறிவியல் கூடமா இல்லை ஆவிகள் கூடமா எனத் தெரியவில்லை. தனியாக ஒரு தொழிற்சாலை. பக்கத்தில் வேறேதும் இல்லை. மருத்துக்கு மரங்கள் மட்டுமே. மரங்களா எனவும் என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை. மரங்கள் ஒவ்வொன்றும் விசித்திரமாக இருந்தன.
    இந்த இடம் குறித்து கேட்கலாம் என்றுதான் காரோட்டிய பெண்ணைத் தேடினேன். இல்லை. வந்திரங்கிய உயர் ரக கார். இல்லை. அதற்குள் எப்படி புறப்பட்டிருக்க முடியும். தெரியவில்லை. புரியவுமில்லை. தொழிற்சாலையின் நடைபாதை தெரிய நானாகவே நடந்துச் சென்றுக் கொண்டிருந்தேன். முழுவும் விளக்குகள். வெளியில் இருப்பதைவிட உள்ளே அதிக வெளிச்சமாக இருந்தது.
     அறைக்கதவின் மூன் வருசையின் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு இளைஞன் மட்டும் உட்கார்ந்திருந்தான். அந்த நிசப்தத்தில் என காலடி ஓசை சத்தமாகக்  கேட்டது. அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தவாறு இருந்தான். எனக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தது.
    ஆனால் அவன் இப்படி நிமிர்ந்து நிமிர்ந்து உட்காரவேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவனாக இதனை வேண்டுமென்று செய்வது போல உணர்கிறேன். அதான் சொல்லுவார்களே இம்மாதிரி நேர்முகத் தேர்வுக்கு செல்கிறவர்கள், நேரான பார்வையும் நிமிர்ந்து உட்காரும் பாணியும் அவர்களின் ஆளுமையைக் காட்டுமென; அதாகக் கூட இருக்கலாம். ஏன் இவன் அதையே இப்படி கோமாளித்தனமாகச் செய்கிறான்.
      அந்த நாற்காலிக்கு அருகில் இருக்கும் கதவை பற்றி ஏதும் சொன்னெனா..? இல்லையென்றால் இப்போது சொல்கிறேன். அந்த நாற்காலி அருகில் கதவு இருக்கின்றது. கதவின் மேல் கருப்பாய் ஏதோ பூச்சி இருக்கிறதே, என்ன பூச்சி அது. பல்லி இப்படி இருக்காதே, பட்டாம்பூச்சிக்கு சிறகு இருக்குமே.. அட இது சிலந்தி. உயிரோடு இருக்கிறதா இல்லையா. ஒருவேளை ஒட்டிகையோ.
     மணிசத்தம் கேட்டது. நிமிர்ந்து நிமிந்து உட்கார்ந்த மனிதன், அதான் அந்த கோமாளி மனிதன் உள்ளே சென்றான். அதில் பாருங்கள். மணி அடித்ததும் அவனாக எழாமல், யாரோ தள்ளியது போல முன்னோக்கி எழுந்தான்.
      தூரத்தில் மீன் தொட்டி இருப்பதை இப்போதுதான் பார்த்தேன். சரி வெறுமனே உடார்ந்திருக்காமல், எழுந்து அந்த மீன்களை பார்க்கலாம் என நடக்கத் தொடங்கினேன். அந்த இளைஞன் உடார்ந்திருந்த நாற்காலையைத் தாண்டித்தான் செல்லவேண்டும். ஆனால் செல்லவில்லை. நின்றுவிட்டேன். அடுத்த அடியை என்னால் வைக்க முடியவில்லை.
     சொன்னால் நம்புவீர்களாக் கூட தெரியவில்லை. நாற்காலி நடுவுல் குழியாக இருக்கிறது. இல்லை , இல்லை. இது குழியல்ல ஏதோ நூலால் மட்டுமே தைத்தது போல இருக்கிறதே. அதுவும் இல்லை இது சிலந்தி வலை. இந்த சிலந்தி வலை எப்படி அந்த இளைஞனின் பாரத்தைத் தாங்கியது.
     காரணமின்றியே கையை வைத்து அழுத்தினேன். ம்... தொடுதல் சிலந்தி வலையைப் போலத்தான் இருக்கிறது. ஆனால் வலை கிழியவில்லையே. எப்படி. இந்த வலை என் கை அழுத்தத்தை தாங்குவது ஆச்சர்யமா இருக்கிறதே. ஐயோ..! என்ன இது என்னால் என் கையை எக்க முடியவில்லையே. விரல்கள் வலையில் ஒட்டிக் கொண்டதே. ம்...ம்..... வரமாட்டேன் என்கிறதே. என்ன செய்ய..?
     அந்த இளைஞன் எப்படி உட்கார்ந்திருந்தான். ஒருவேளை இதில் மாட்டிக் கோண்டுதான் பல முறை எழ முயன்றானோ? அதே வரிசையில் இருக்கும் என்னிடம் கூட அவன் உதவி கேட்கவில்லையே?
    அப்பா.....ஒருவழியாக கையை எழுத்து விட்டேன். கையில் அந்த சிலந்தி வலையில் அச்சி அப்படியே இருந்தது. சில அடிகள் முன் வைத்து மீன் தொட்டிக்கு சென்ற எனக்கு இன்னொரு ஆச்சர்யம். அந்த மீன் தொட்டியில் மீனுக்கு பதில் சில சிலந்திகள் இருக்கின்றன. மீன் தொட்டிகளில் எலி வளர்த்த காலம் மாறி இப்போ சிலந்திகளையெல்லாம் வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்களா.
   ஆனால், ஆனால், ,ஆனால். இந்த சிலந்திகளின் முகம் மனித முகம் போல இருக்கின்றன. இது என்ன பைப் துவாரத்தில் இருந்து புதிய சிலந்தி ஒன்று வந்து விழுகிறதே. அது, அது, அது அந்த புது சிலந்தியின் முகத்தைப் பாருங்களேன். எனக்கு நன்றாய் தெரிந்த முகம் போல இருக்கிறது. எப்போது பார்த்தேன் தெரியவில்லையே... எப்போது, எப்போது, எப்போது....? ஆம் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. முன்பு பார்த்த இளைஞனின் முகம் இது. அதான் நிமிர்ந்து நிமிர்ந்து உட்கார்ந்தானே அதே இளைஞன்.
     இந்த அறிவியல் கூடத்தில் தவறாக ஏதோ நடக்கிறது. அப்படித்தான் என் உள் மனது சொல்கிறது. ஒருவேளை, வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் செய்து, இவங்களே கூட்டி போகிறார்கள், யாருக்கும் இடம் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நானும் இப்படி ஒர் சிலந்தியாகிடுவேன்.
    கூடாது. என்னால் இப்படி சிலந்தியாகி, மீன் தொட்டியில் எல்லாம் இருக்க முடியாது.
   அய்யோ! மீண்டும் மணி சத்தம் கேட்கிறது. அந்த கதவு திறக்கப்படுகிறது. இனி ஓட வேண்டும். ஓடத் தொடங்கினேன். ஓடும்போது திறந்திருக்கும் கதவை எட்டிப்பார்த்தேன். எப்படி சொல்வதென தெரியவில்லை. ஒரு மாதிரி நிழல்போல பெரிய என்னமோ ஒன்று நின்றுக் கோண்டிருந்தது. இனியும் தாமதிக்க கூடாது.
    ஆசைபட்ட வேலையும் கோவிந்தா.
    இனியும் எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் ஒன்று, எனக்கு கிடைத்த இந்த வேலை அனுபவத்தை ஒரு கதையாக எழுதலாம்னு நினைக்கறேன். கதை எழுதலாம்னு சொல்லும் போது இன்னொரு நகைச்சுவையும் நினைவுக்கு வருகிறது. சொல்லவா...
     இது சிரிக்க மட்டும், தவறியும் சிந்திச்சிங்கன்னா என் மேல கோவப்படுவிங்க. அப்பறம் என்னை பற்றிய புகார்களை தேடுவிங்க. அதனாலதான் சொல்றேன். இது சிரிக்க மட்டும். இருவர் இப்படி பேசுகிறார்கள்;
“அண்ணே நானும் எழுத்தாளராகனும். அதுக்கு நான் என்ன அண்ணே செய்யனும்”
“ஓ, அதுக்கு நிறைய வாசிக்கனும், பலரில் எழுத்தாளுமையை புரிஞ்சிக்கனும்”
“அண்ணே, நிறைய வாசிக்காமலும், யாருடைய எழுத்துகளையும் படிக்காமலும் , எழுத்தாளராக முடியாதா..?”
“ஏன் முடியாது. நிச்சயமா முடியும்”
“ஹையா... அண்ணே அதை சொல்லுங்கன்னே. நானும் எழுத்தாளராகிடறேன்”
“உங்க முடிவுல உறுதியா இருக்கிங்கலா தம்பி”
“கண்டிப்பா”
“அப்படின்னா. இருக்கற ஏதாவது ஏதாவது எழுத்தாளர் சங்கத்துல மெம்மராகிடுங்க.”
“நெஜமாவா”
“பின்ன, பொய்யா சொல்றேன்”
“அண்ணே, என்னை வச்சி காமிடி கீமிடி செய்யலையே..?”
“அவ்வ்வ்வ்வ்வ்”

     சரி, என்னோட கதையின் முதல் வரியை சொல்லவா; அந்த எட்டுகால் பூச்சியை அப்போதே நசுக்கியிருக்க வேண்டும். செய்யவில்லை. தவறுதான். இனிமேலும் ஏதும் செய்ய இயலாது. கை வலிக்கிறது.

          
   

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்