பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

அக்டோபர் 14, 2011

புத்தக முதலீடும் வார்த்தை இரசவாதமும்










இந்த தீபாவளிக்கு வாங்கிய புத்தகங்கள் இவை. புத்தகம் வாங்குதல் என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். ஆனால் இந்த ‘வாங்கல்’ வழக்கத்தில் இருந்து மாறுபட்டு பயணிக்கத் தொடங்கியதால் பதிகிறேன்.

1. ந.பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனித நேயமும்.
- எழுதியவர் சுந்தர ராமசாமி.



2. சுந்தர ரானசாமி நினைவின் நதியில்.
- எழுதியவர் ஜெயமோகன்.



3. நிழல்வெளிக் கதைகள்.
- எழுத்தியவர் ஜெயமோகன்.


4. வாழ்விலே ஒரு முறை அனுபவக் கதைகள்.
- எழுதியவர் ஜெயமோகன்.


5. அந்நியன்.
- எழுத்தியவர் ஆல்பெர் காம்யு
- பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் வெ.ஸ்ரீராம்.
- 1942 வெளிவந்த புத்தகம்.
- இந்த படைப்பிற்காக இதன் எழுத்தாளருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
- பிரெஞ்சு மொழியில் மட்டும் 60,00,000 பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறதாம். - கிட்டத்தட்ட உலகின் எல்லா மொழிகளிலும் இந்த புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.


6. நினைத்தது போலவே வெற்றி.
- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.

7. வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்
- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.


8. பின்னடைவுகளைப் பிளந்து முன்னேறுங்கள்.
- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.


9. வென்றவர் வாழ்க்கை.
- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.


10. ஒரு கப் உற்சாகம்.
- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.


11. கான்ஃபிடன்ஸ் கார்னர் - 100 நம்பிக்கை வெளிச்சங்கள்.
- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.


12. நம்பிக்கை மின்னல்கள் (கான்ஃபிடன்ஸ் கார்னர் - பாகம் 2)
- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.


13. கான்ஃபிடன்ஸ் கார்னர் - பாகம் 3.
- எழுதியவர் கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா.


பெறும்பாலும் புத்தகக்கடைகளுக்குச் சென்றால், கடைக்காரரைக் கூடத் தொந்தரவு செய்ய விரும்ப மாட்டேன். நானே ஒவ்வொரு அலமாரியாக அலசுவேன். நேரம் எடுத்து ஏறக்குறைய எல்லா புத்தகங்களையும் தொட்டுப் பார்த்துவிடுவேன். ஒரே வருசையில் மூன்று நான்கு முறைகள் கூட வந்திருக்கிறேன். சில புத்தகங்கள் மூன்றாவது முறை வரும்போதுதான் கண்ணில் படும்.


இந்த புத்தகங்களை தலைநகர் உமா பதிப்பகத்தில் வாங்கினேன். வழக்கம் போல கடையில் புத்தகங்களுக்கு இடையில் இருவர் நினைவில் மின்னலாய் வந்தார்கள். ஒருவர் நவின் மற்றொருவர் பாலமுருகன்.


நவின் குறித்த மின்னல்;
“அண்ணே இந்த ஆண்டு எனக்கு 25 வயதாகுது. இந்த வயதில் என் கனவு ஒரு புத்தகம் வெளீயீடு செய்யனும் அண்ணே... எனக்கு லாபம் இல்லாட்டியும் பரவாலை.... என் பெயர் சொல்ற மாதிரி 25-வது வயதில் ஒரு புத்தகம் இருந்தாலே போதும்”
“அப்படியே என்ன புத்தகம் வெளியிடலாம்னு இருக்கிங்க..?”
“ அண்ணே என்னோட பெரும்பாலாகக் கதைகள் அமானுஷ்யக் கதைகளாக இருக்கும்; அமானுஷ்யக் கதைகளின் தொகுப்புன்னு போடலாம்.. எவ்வளவு செலவாகும்..? முதலில் 500 புத்தகம் பிரசுரிக்கலாம்தானே...”
“செஞ்சிரலாம் தயாஜி ஒன்னும் பிரச்சனை இல்லை...”
எனக்கும் நவினுக்குமான இந்த முகநூல் உரையாடல் அத்துடன் முடிந்தது. சில வாரம் கழித்து நவினிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. அவர் பணி செய்யும் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியத்தை பேசுவதற்கு யோகி , மணி மொழி , பால முருகன் உடன் நானும் வேண்டுமாம்.


அன்றைய தினம் அவரது வீட்டில் பாலமுருகனைத் தவிர்த்து மற்றவர்கள் சந்தித்தோம். நேரம் கொஞ்சம் இருந்ததால் நவினும் நானும் புத்தகங்கள் குறித்து பேசினோம். அப்போதுதான் அன்று நான் பேசிய என் முதல் புத்தக வெளியீடு குறித்து நவின் மீண்டும் பேசினார். முதல் புத்தகம் என்பது ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் எவ்வளவு முக்கியம் என புரியவைத்தார். பல புத்தகங்கள் எழுதி காணாமல் போனவர்கள் குறித்தும் ஒரே புத்தகம் மூலம் இறந்த பின்னும் இருக்கின்றவர் குறித்தும் பேசி எழுத்தில் அடுத்தக் கட்டம் குறித்து கருத்து பரிமாறினோம். அதற்கு முன் நான் எழுதிய அமானுஷ்ய ,பேய், கதைகளைப் படித்திருந்த நவின் அதில் சுவாரஸ்யம் இருக்கும் அளவுக்கு உளவியல் ஏதும் காணப்படவில்லை என்றார். புரியாத எனக்கு மேலும் விளக்கினார்.


அப்போதுதான் ஜெயமோகனின் புத்தகம் குறித்துப் பேசினார். ஜெயமோகனின் ‘நிழல்வெளிக் கதைகள்’ என்ற புத்தகத்திக் இருந்து ‘தம்பி’ என்ற கதையினைச் சொல்லி அதில் இருந்த உளவியலை விளக்கினார். அந்த புத்தகத்தை அடுத்த முறை இரவல் தருவதாகக் கூறினார். அப்போதைய பேச்சு முடிந்ததும். மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்தும் கதை, கதை மாந்தர்கள் குறித்தும் பேசப் புறப்பட்டோம். (மாணவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பும் அதன் விளைவும் வேறொருப் பதிவில்....) பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் பேசியதற்காக எங்களுக்கு ஆளுக்கொரு புத்தகத்தை நினைவாக வழங்கினார்


நவின்.
நான்,
யோகி,
மணிமொழி,
மூவறின் எழுத்துகளை உள்வாங்கியதாலோ; எங்களுக்கு ஏற்ற புத்தகங்களக் காரணத்துடன் வழங்கினார்.


நான் பெற்ற புத்தகம், ‘சுந்தர ராமசாமி – இவை என் உரைகள்’ 1987 முதல் சு.ரா ஆற்றிய உரைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.
ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். கொடுக்கும் போதே நவின் சொன்ன வார்த்தை “இந்த உரைகள் உங்களின் சிந்தனைக்கு வழிகாட்டியாகவும்; பலரின் கேள்விகளுக்கு பதிலாகவும் அமையும் தயாஜி.... எனக்கும் அப்படித்தான் அமைந்தது” . ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது தானாகவே நவின் கூறிய வார்த்தைகள் வந்துச் சேர்ந்தன. இந்த புத்தகம் ஏற்படுத்திய சிந்தனை மாற்றத்தையும் வேறொரு பதிவில் சொல்கிறேன்.


இனி அந்த புத்தகக் கடையில்;
எப்படியாவது கையில் இருக்கும் பணத்தினைக் கொண்டு புத்தகம் வெளியிடலாம் என்ற எண்ணத்தில் அவர் பேச்சின் மூலம் மறுபரிசீலனை ஏற்பட்டது. இதுவரை எவர் சொல்லியும் கேட்காமல் இருந்த நான் நவின் கொடுத்த விளக்கத்தாலும் முதல் நூலில் அவசியத்தாலும் என் முடிவை மாற்றினேன்.


அடுத்து பாலமுருகன் குறித்த மின்னல்;


தொடக்கத்தில் நா.முத்துக்குமாரின் கவிதைகளை வீடியோவாக நான் படித்து முகநூலில் அதனைப் பதித்தேன். பலர் புகழ்ந்தார்கள்; கொஞ்சம் அதில் மயங்கி அடுத்தடுத்து நா.மு-வின் சில கவிதைகளைப் படித்து வீடியோவாக முகநூலில் பதிவு செய்தேன்.


இது நடந்த சில நாள்களுக்கு பிறகு வழக்கம் போல என்னுடன் முகநூலில் பேச வந்த பாலமுருகன் என் மீதுள்ள அதிருப்த்தியைச் சொன்னார். நான் பதிவு செய்த வீடியோவால் என்ன பயன்.. அது சரியா.. கவிதையின் புரிதல் என்ன்... எவ்வாறு ஆளுக்குஆள் கவிதைக் குறித்த புரிதல் மாறுபடும் என்பதை விளக்கினார்.
என் ஆர்வக்கோளாறு அப்போது புரிந்தது. அன்று முதல் அப்படி செய்வதில்லை.


ஆக என் மீதும் என் எழுத்தின் மீதும் அக்கறைக் கொண்ட இரண்டு பேர்களில் சரியாக நானும் பயன்படுத்தவே விரும்புகிறேன்.
இதற்கிடையில் கண்ணதாசனின் ‘சுருதி சேராத ராகங்கள்’ என்ற நாவலை படித்து அது குறித்து பதிவிட்டப் பிறகு நவினிடமிருந்து வந்திருந்த தொலைபேசி அழைப்பும் கடிதமும் என் நிலையை எடுத்துரைத்தது. அடுத்தக்


கட்டம் என்பது எது?


யாரால்?


எப்படி?


போன்றவற்றில் தெளிவு கொடுக்கும் படி அந்த கடிதம் இயற்றப்பட்டிருந்தது.
இப்போது புத்தகக்கடையில் இருந்து சில புத்தகங்களுடன் இருவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எது இப்போதைக்கு எனக்கு அவசியம் என்பதை விசாரித்தேன்....

பாலமுருகன்;


“தயாஜி ஜெயமோகனின் எந்த புத்தகத்தையும் நீங்க வாங்கிப் படிக்கலாம்... அப்பறம் அந்த பிச்சமூர்த்தி குறித்த புத்தகம் தொழில் சார்ந்து உங்களுக்குப் பயன்படலாம்....”

நவின்;


“நல்லது தயாஜி. ஜோயமோகன் சுந்தர ராமசாமி பற்றி எழுதிய புத்தகம் படியுங்க.. அதோடு ந.பிச்சமூர்த்தி வந்து முக்கிய ஆளூமையில் ஒருவர். கண்டிப்பா அவர் குறித்து சுந்தர்ராமசாமி எழுதிய புத்தகத்தை இப்போது நீங்கள் படிக்கனும்...”
பேசி முடித்த சில நிமிடங்களில் மீண்டும் நவின் அழைத்தார்
“தயாஜி.. இப்போ உமா பதிப்பகத்தில்க்தானே இருக்கிங்க... அங்க மட்டும்தான் இந்த புத்தகம் கிடைக்கும். கேட்கிடுப்பாருங்க. புத்தகத்தோட தலைப்பு ‘அந்நியன்’. வெள்ளை அட்டையில் சிகப்பு வட்டம் இருக்கும். மொழி பெயர்ப்பு புத்தகம் அது. அன்னிக்கு நான் வாங்கும் போதே ஒன்னோ ரெண்டோதான் இருந்த ஞாபகம். கேட்டுப்பாருங்க. நோபல் பரிசு வாங்கிய புத்தகம். அதை எழுதியவர் ‘ஆல்பெர் காம்யு’. தயாஜி இந்த புத்தகத்தை நீங்க நேரம் எடுத்து படிக்கனும்... பலர் இந்த புத்தகம் படித்து மனப்பிறழ்வுக்கு ஆளாகியுள்ளதா சொல்றாங்க; நீங்களும் படிச்சி உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்க... ஜெயமோகனின் புத்தகங்களும் அவசியமானதுதான் ” என்றார்.
குறிப்பிட்ட புத்தகங்களை எடுத்து வைத்து மீண்டும் ஒரு சுற்று வரும் போதுதான் ஜெயமோகன் எழுதிய ‘நிழல்வெளிக் கதைகள்’ கையில் கிடைத்தது. திறந்தவுடன் ‘தம்பி’ என்ற தலைப்பில் கதை இருக்கிறதா எனப் பார்த்தேன். இருந்தது. உடனே நவினுக்கு அழைத்து என் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினேன். அவர் அன்று சொல்லியதால்தான் இந்த புத்தகம் குறித்து என்னால் அறியமுடிந்தது.
மற்றபடி நான் வாங்கிய புத்தகங்கள் என் தொழில் ரீதியாகவும் எனக்கு அவ்வபோது தன்முனைப்பு கொடுப்பதாகவும் இருக்கக்கூடியதாகவும் இருக்கும் புத்தகங்கள்.
இனி எண்ணிக்கை அடிப்படையில் புத்தகங்கள் வாங்குவதைவிட தகுதியான நம் மீது அக்கறைக் கொண்ட சிலரின் ஆலோசனையுடன் தரம் அடிப்படையில் புத்தகம் வாங்க வேண்டும் என எனக்கு நானே உறுதி எடுத்துக் கொண்டேன். உடன் வாங்கிய ஏனைய கலமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையாவின் தன்முனைப்பு நூல்கள் வானொலி அறிவிப்பாளராய் என் தொழில் சார்ந்தது.


வாசிப்பில் முதலீடு செய்து வார்த்தைகளைப் பெறுவதும் இரசவாதம்தான். எல்லா புத்தகங்களாலும் இயலாது.....

தயாஜி

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்